Exclusive: முத்தலாக் சட்டம்.. தம்பதிகளை பிரிக்கவே பயன்படும்.. முஸ்லீம் பிரமுகர்கள் எதிர்ப்பு
முத்தலாக் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
Recommended Video
சென்னை: மத்திய அரசின் முத்தலாக் சட்டத்திற்கு பகிரங்க எதிர்ப்பு முஸ்லிம் தரப்பிலிருந்து கிளம்பி உள்ளது.
இஸ்லாம் மதத்தில் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து பெறுவது நடைமுறையில் இருக்கிறது. இந்த நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில் இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமைகளை பாதுகாக்கும் சட்ட மசோதா கடந்த வருடம் கொண்டு வரப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் இம்மசோதாவிற்கு ஆதரவு கிடைக்கவில்லை.
அதனால் இந்த சட்டத்தினையும் பாஜக அரசால் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் நேற்று பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூடி, அவசர தடுப்புச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலுக்கு இஸ்லாமிய மக்கள் வரவேற்பு தெரிவித்தாலும், பெரும்பாலானோர் இதற்கு பகிரங்கமாக எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரபலங்கள் சிலரை "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக தொடர்பு கொண்டு கருத்துக்கள் கேட்டோம்.
பேராசிரியர் ஜவாஹிருல்லா, (தலைவர் - மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்)
மோடி தலைமையிலான இந்த அரசு பிறப்பித்திருக்கும் முத்தலாக் அவசர சட்டமானது, அவசர கதியில் பொறுமையற்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டைதான் வெளிப்படுத்தி உள்ளது. 2017-ல் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கிலே தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தை கவனத்தில் எடுத்து கொள்ளாமல், நாடாளுமன்றத்தை மீறி மத்திய அவசர சட்டங்கள் பிறப்பித்ததை ஏற்கனவே உச்சநீதிமன்றமே கண்டித்திருக்கிறது. ஆனால் இதே அடிப்படையில்தான் சட்டம் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும் கூட எதிர்க்கட்சியின் நியாயமான எதிர்ப்பின் காரணமாக இந்த சட்ட முன்வடிவினை அவர்கள் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தவே முடியவில்லை.
குடும்பத்தை யார் பார்ப்பது?
இந்த சூழ்நிலையில் இந்த சட்டத்தை ஒரு அவசர சட்டமாக பிறப்பித்திருப்பது மோடி அரசாங்கத்தின் முஸ்லிம் விரோத போக்கை வெளிப்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்த சட்டம் எந்த வகையிலும் முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்க முடியாத ஒன்று. மேலும் உச்சநீதிமன்றம் ஒரே அமர்விலே 3 முறை தலாக் சொல்வது சட்டவிரோதமானது என்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம் என்றால், அந்த திருமண உறவு தொடர்கிறது என்றுதான் அர்த்தம். ஆனால் இப்படி சட்டம் இயற்றுவதால், கணவனை சிறைக்கு அனுப்பிவிட்டால் அந்த குடும்பத்தை யார் பார்ப்பது? என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது.
சட்டவிரோதமானது அல்ல
அதுமட்டுமல்லாமல், இந்த தலாக் சட்டம் பல்வேறு வகையான மாற்றுக் கருத்துக்களுக்கு வழி வகுக்கக்கூடிய வகையில் உள்ளது. உச்சநீதிமன்றம் முத்தலாக்கைதான் தடை செய்தது. ஆனால் ஒரே ஒரு முறை தலாக் சொல்வது சட்டவிரோதமானது அல்ல என்று சொல்லி நீதிமன்றமே அதை அங்கீகரித்தது. ஆனால் இந்த சட்டத்தின் கீழே ஒரு முறை தலாக் சொன்னாலும் கூட அதை முத்தலாக் என்று சொல்லி இஸ்லாமியர்களை தண்டிக்க கூடிய ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.
நிர்க்கதியான பெண்கள்
மோடி அரசுக்கு முஸ்லிம் பெண்கள் மீதுஎந்தவிதமான அக்கறை கிடையாது. முஸ்லிம் பெண்கள் மீது பச்சாதாபம் படக்கூடிய அரசு கிடையாது இந்த மோடி அரசு. ஏனென்றால் இந்த அரசாங்கத்தின் கீழ்தான் பாஜக ஆட்சி செய்யக்கூடிய பல்வேறு மாநிலங்களிலே அப்பாவி முஸ்லிம்கள் பசுமாட்டின் பேரிலே அடித்து கொல்லப்பட்டு அவர்களுடைய குடும்ப பெண்கள் எல்லாம் நிர்க்கதியாக நின்று கொண்டிருக்கிறார்கள்.
கணவன்களுக்கு என்ன தண்டனை?
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் அனைவருக்குமே ஒரே மாதிரியான சட்டம் அல்லவா வேண்டும்? முஸ்லிம் பெண்கள் முத்தலாக் வகையிலே விவகாரத்து செய்தால் அவர்களுடைய கணவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று மத்திய அரசு சொல்கிறது. அப்படியென்றால், இந்த நாட்டில் பல்வேறு சமயங்களை சார்ந்த எத்தனையோ லட்சக்கணக்கான பெண்கள் கணவனால் கைவிடப்பட்டு அபலைகளாக இருக்கிறார்கள். அந்த கணவன்களுக்கெல்லாம் என்ன தண்டனை? அதற்கு மட்டும் எந்த சட்டமும் இயற்றவில்லையே ஏன்? இப்போது முஸ்லீம்களை பழிவாங்க வேண்டும் நோக்கத்திலே அவசர கதியில் இந்த சட்டத்தை எதிர்த்து போராடுவோம்!
சல்மா (கவிஞர், திமுக மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளர்)
நிறைய நெருக்கடிகளில் மத்திய அரசு உள்ளது. எப்போதுமே மத ரீதியான விஷயங்களை கையில் எடுத்து, அதில் வெற்றி பெறுவதுதான் பாஜகவின் அரசியல் தந்திரம். இப்போதும் இதேபோல ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தேர்தல் நெருங்கி கொண்டு வருகிறது. பெட்ரோல், விமான ஊழல் விவகாரங்கள் பாஜக முன் வரிசைகட்டி நிற்க, அதையெல்லாம் களைய முயற்சிக்காமல், இவ்வளவு அவசரமாக இந்த சட்டத்தை கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு விஷயங்களை அவர்கள் தொடர்ந்து கையில் எடுக்க காரணம் என்ன?
அரசியல் லாபம்
இந்தியாவில் மிக முக்கிய பிரச்சனையானது ஆணவக் கொலை. தினமும் எங்காவது ஒரு இடத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்த சாதியை அடிப்படையாக கொண்ட ஆணவக் கொலைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தியிருக்க வேண்டும். எத்தனையோ பேர் சாக்கடைகளை இறங்கி சுத்தம் செய்யும் போது இறந்து கொண்டு வருகிறார்கள். இவர்களை பற்றியெல்லாம் யோசிக்க இந்த அரசுக்கு நேரம் இல்லை. எனவே முழுக்க முழுக்க தங்களின் அரசியல் லாபத்துக்காக சிறுபான்மையினரின் பிரச்சனையை மத்திய பாஜக கையில் எடுக்கிறது.
3 தலாக் 3 மாதம்
இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்தால், பிரச்சனைக்குரிய ஆணும், பெண்ணும் சேர்த்து வைக்கக்கூடிய விஷயமே அங்கு நடைபெறால் போய்விடும். இதனால் இந்த சட்டத்தினால் தம்பதி பிரியத்தான் நேரிடும். 3 முறை தலாக் சொன்னாலும் அது ஒருமுறை சொன்னதாகத்தான் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். ஒருமுறை தலாக் சொல்லிவிட்டாலும், அந்த பெண்ணும், ஆணும் ஒரே வீட்டில்தான் வாழ்ந்தாக வேண்டும். இப்படி 3 தலாக்கிற்கு 3 மாதம் ஆகும்.
தம்பதியிடையே பிளவு
அதுவரை அந்த வீட்டில் ஒன்றாக இருக்கும் ஆணும், பெண்ணையும் அந்த வீட்டு பெரியவர்கள் ஒன்றாக சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். இதைத்தான் இஸ்லாம் வரையறுக்கிறது. ஆனால் இப்போது இயற்றியுள்ள சட்டம் தம்பதிகளுக்கிடையே இன்னும் பிளவைதான் ஏற்படுத்தும். இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்று சொல்லிக் கொண்டு, இஸ்லாமிய ஆண்களுக்கு எதிராக சில விஷயங்களை பயன்படுத்தவும் முடியும் இந்த மத்திய அரசாங்கத்தால் என்பது நிரூபணமாகி உள்ளது.