ஜெ.அண்ணன் மகள் தீபாவின் தந்தி டிவி பேட்டியை தடுத்து நிறுத்திய அரசு கேபிள் !
திண்டுக்கல்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனான தனது உறவு மற்றும் சசிகலா குடும்பத்தாரால் தானும், தனது குடும்பத்தினரும் போயஸ்கார்டன் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தந்தி டிவிக்கு விரிவாகப் பேசினார். அந்த பேட்டி ஒளிபரப்பான போது பல இடங்களில் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருந்தது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தந்தி டிவிக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் ஜெயலலிதா இருந்தவரை கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக போயஸ் கார்டனுக்குள் சென்று அவரை பார்க்க முடியாமல் போனதற்கான காரணம், அவரது இறப்பில் உள்ள சந்தேகம். முதல்வர் ஜெயலலிதாவுடனான தனது உறவு மற்றும் சசிகலா குடும்பத்தாரால் தானும், தனது குடும்பத்தினரும் போயஸ்கார்டன் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தெளிவாக பேட்டியளித்திருந்தார்.
இந்த பேட்டி நேற்று இரவு 9 மணி அளவில் தந்தி டிவியில் ஒளிபரப்பாகியது. அந்த நேரத்தில் தமிழகத்தின் பல இடங்களிலும் தீபாவின் பேட்டியை தடுப்பதற்காக தந்தி டிவி ஒளிபரப்பை அரசு கேபிள் டிவி கட் செய்துள்ளது. குறிப்பாக பேட்டி ஒளிபரப்பாகும் நேரத்தில் கேபிள் டிவி கட்டாகி பின்னர் 1 மணிநேரத்திற்கு பின்னர் தான் வந்ததாகவும் கூறப்படுகிறது. வேடசந்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கேபிள் டிவியில் தந்தி டிவி தெரியவில்லை என அந்த டிவியின் நிருபர் லட்சுமிபதி ராஜ் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.