விருத்தாச்சலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லை.. மாணவி மரணம்.. உறவினர்கள் மறியல்
சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் பள்ளி மாணவி உயிரிழந்தார்.
விருத்தாச்சலம்: பள்ளியில் மயங்கி விழுந்த மாணவிக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருத்தாசலத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன், இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் மகாலட்சுமி, கம்மாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை மகாலட்சுமி வழக்கம்போல் பள்ளிக்கு வந்தார்.
அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனால் பதறிப்போன பள்ளி நிர்வாகம் உடனடியாக மாணவியின் உறவினர்களுக்கும் தகவல் அளித்துவிட்டு, மகாலட்சுமியை அருகிலுள்ள கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக கொண்டு அனுமதித்தது.
ஆனால் மகாலட்சுமிக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் யாரும் அந்த சமயத்தில் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாணவி மகாலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லாமலும், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததாலும்தான் மாணவி உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பின்னர் உறவினர்களுடன் பொதுமக்களும் இணைந்து, விருத்தாசலம் சேத்தியாத்தோப்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.