சென்னையில் 'வை- பை', கூவத்தில் படகு சர்வீஸ்... திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற மனு
சென்னை: சென்னையில் வை-பை வசதி, கூவத்தில் படகு சர்வீஸ், யூனிட் மின்சாரம் மூன்று ரூபாய் போன்ற வாக்குறுதிகள் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டும் என கனிமொழி எம்.பி.யிடம் மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
2016 சட்டசபைத் தேர்தலையொட்டி திமுக-வில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மகளிர் அணி மாநில செயலர் கனிமொழி எம்.பி. ஆகியோர் இக்குழுவிற்கு தலைமை ஏற்றுள்ளனர். இக்குழுவினர், அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, கருத்து கேட்டு வருகின்றனர்.
அதன்படி, இந்தக் கருத்து கேட்பு கூட்டம் தியாகராய நகரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன், துணை பொது செயலாளர் வி.பி.துரைசாமி, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து கருத்துக்களை கேட்டறிந்தனர்.
மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஏற்பாட்டில், சிறுபான்மை அமைப்பினர், மாற்றுத்திறனாளி அமைப்பினர், வியாபாரிகள் அமைப்பினர், திருநங்கைகள் அமைப்பினர் உள்பட பல்வேறு அமைப்பினரும் மற்றும் பொதுமக்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
அப்போது சென்னை மேற்கு மாவட்ட செயலர் ஜெ.அன்பழகன் அளித்த மனுவில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். அவையாவன:
சென்னையில், வை - பை வசதி, சட்டசபை தொகுதிக்கு ஒரு தாசில்தார் அலுவலகம், கூவம் நதியை சீரமைத்து படகு ஓட்டம், போரூர் ஏரி விரிவாக்கம், குடிசை மாற்று வாரிய மற்றும் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளுக்கு பட்டா, வீடுகளில் பயன்படுத்தும் ஒரு யூனிட்டுக்கு, 3 ரூபாய் மட்டும் மின் கட்டணம் போன்ற அம்சங்கள் அவசியம். ரேஷன் கடைகளுக்கு தனி வாரியம், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சென்னையில் புதிய மேம்பாலங்கள், சென்னை குடிநீர் வாரியம் - மாநகராட்சி இணைப்பு போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட வேண்டும்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் கனிமொழி. அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களை சந்தித்து கருத்து கேட்டு வருகிறோம். அப்படி, கருத்து கேட்டதில், பெரும்பாலான மக்கள் தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகாலமாக ஆட்சி நடைபெறவில்லை என்றும், நிர்வாகம் செயல்பாடற்ற நிலையில் காணப்படுகிறது என்றும், எனவே இதனை முதலில் மாற்ற வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை பொருத்தவரையில் எல்லா தரப்பு மக்களின் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் அமையும். குறிப்பாக விவசாயிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமையும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.