அவினாசி – அத்திக்கடவு உண்ணாவிரதம் வாபஸ்: போராட்டக் குழு அறிவிப்பு !
அவினாசி: அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக் கோரி நடந்து வந்த உண்ணாவிரத போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அவினாசி பஸ் நிலையம் எதிரில் கடந்த 8-ந் தேதி முதல் 14 பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று இந்த திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கான அரசாணையை திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் போராட்டக்காரர்களிடம் வழங்கினார். இதையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கோட்டாச்சியரிடம் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து கோட்டாட்சியர் முருகேசன் பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
அதேபோல் கோவை, திருப்பூர், அன்னூர், அவினாசி, தெக்கலூர், சேவூர், கருவலூர், பெருமாநல்லூர், குன்னத்தூர், ஊத்துக்குளி, பெருந்துறை, சென்னிமலை ஆகிய பகுதிகளிலும் நடந்த போராட்டங்கள் முடிவுக்கு வந்தன. மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நாளை நடைபெறவிருந்த கடையடைப்பு போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது. இதனால் அவினாசி - அத்திக்கடவு திட்டத்துக்காக கடந்த 12 நாட்களாக நடந்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications