முதல் திருமணத்தின் போது பிறந்த குழந்தையை அதன் தாயிடமே ஒப்படைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: முதல் திருமணத்தின் போது பிறந்த குழந்தையை அதன் தாயிடமே ஒப்படைக்குமாறு மாமியாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
நாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் சுபா. இவருக்கும் மேனன் பாபு என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு காவ்யஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேனன் பாபு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சுபா தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். சில நாள்களுக்குப் பிறகு, அதாவது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுபா, சுசீந்திரன் என்பவரை மறு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய காவ்யஸ்ரீயை, மேனன் பாபுவின் தாய் காளியம்மாள் கடத்திச் சென்றுவிட்டார். தன் மகனுக்குப் பிறந்த குழந்தை தன்னுடன்தான் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
குழந்தை காவ்யாஸ்ரீ, கடத்தப்பட்டது குறித்து சுபா, போலீஸில் புகார் அளித்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர், குழந்தையின் உண்மையான பாதுகாவலர் அவரது தாயே. எனவே குழந்தையை வளர்க்கும் முழு உரிமையும் தாயுக்கே உள்ளது. எனவே, காளியம்மாள் குழந்தை காவியஸ்ரீயை அவரது தாய் சுபாவிடம் உடனே ஒப்படைக்க உத்தரவிட்டனர். மேலும், குழந்தையை ஒப்படைப்பதற்கு தேவையான உதவியை செய்யுமாறு நாகப்பட்டிணம் போலீஸாருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications