கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம் !
நெல்லை: கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி இன்று மாலை நிறுத்தப்பட்டுள்ளது. டர்பன் ஜெனரேட்டரின். ஆய்வுக்கு பின்னர் மீண்டும் 24 மணி நேரத்திற்கு பிறகு மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா ரஷ்யா கூட்டு முயற்சியில் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலை கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அணு பிளவுக்கு உள்படுததப்பட்டது. அக்டோபர் 22ம் தேதி முதல் அங்கு மின் உற்பத்தி தொடங்கியது. 2014ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி அணு உலை அதன் முழு கொள்ளளவு மின் உற்பத்தியான ஆயிரம் மெகா வாட்டை எட்டியது.
இதை தொடர்ந்து டிசம்பர் 31-ந் தேதி வணிக ரீதியான மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. பின்பு பராமரிப்பு பணிகளுக்காக சென்ற ஆண்டு (2015) ஜூன் மாதம் 24-ந்தேதி முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதுவரை மொத்தம் 687.5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இதன்மூலம் ரூ.1565 கோடி வருவாய் ஈட்டியது. இந்த மின்சாரத்தில் 310 கோடி யூனிட் தமிழகத்துக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து முதல் அணு உலையில் பராமரிப்பு பணிகள் நடந்தன. இதையடுத்து இன்று காலை 7.12 மணிக்கு கூடங்குளம் அணுமின்நிலையத்தின் முதல் அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. உற்பத்தி தொடங்கிய சிறிது நேரத்தில் மின் உற்பத்தி 60 மெகாவாட்டை எட்டியது.
இந்நிலையில் முதல் அணு உலையில் மின் உற்பத்தி இன்று மாலை 5.35 மணிக்கு நிறுத்தம் செய்யபட்டுள்ளது. டர்பன் ஜெனரேட்டரின் ஆய்வுக்கு பின்னர் மீண்டும் 24 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.