‘பூங்கா வேண்டும் அண்ணா’.. ஹாசினி கேட்டதுமே ஸ்பாட்டிலேயே ஆக்சன் எடுத்த உதயநிதி.. பூரித்த சிறுமிகள்
சென்னை: கடந்த டிசம்பரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த சிவகங்கையை சேர்ந்த சிறுமிகள் இரண்டு பேர், தங்கள் பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் சிறுமிகளின் கோரிக்கையை ஏற்று சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது . இதை தனது ட்விட்டர் பக்கத்தில் படங்களை வெளியிட்டு உறுதி செய்துள்ளார் அமைச்சர் உதயநிதி.

இது தொடர்பாக அண்மையில் சட்டசபையில் பேசிய அமைச்சர் உதயநிதி, வயதில் பெரியவர்கள் மட்டுமின்றி, சிறுவர், சிறுமிகள் வைக்கும் கோரிக்கைளுக்கு கூட உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில் தான் நம்முடைய அரசு துறைகள் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் டிசம்பர் மாதம் 24ம் தேதி சிவகங்கை மாவட்டத்திற்கு ஆய்வுக்காக நான் சென்றிருந்தேன்.

அங்கு சிறுகூடல் பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவும், நானும், நம்முடைய அண்ணன் அமைச்சர் பெரிய கருப்பன் அவர்களும், சென்றிருந்தோம். அங்கிருந்த 6 வயது சிறுமிகள் ஹாசினி, ஜெசிந்தா, என்னை அவரது வீட்டுக்கு வாங்க என்று அழைத்து சென்றார். அவங்க வீட்டுக்கு நான் போனேன். காபி போட்டு கொடுத்தாங்க.. காபி குடிச்சிட்டு நான் அவரிடம் கேட்டேன். உங்களுக்கு என்னம்மா வேணும், உனக்கு ஏதாவது ஆசை இருந்தா சொல்லு வாங்கித்தாரேன் என்று சொன்னேன். அங்கிருந்த சிறுமிகள் இருவரும் என்னிடம் கேட்டது ஒன்னே ஒன்னுதான்.. எங்க சமத்துவபுரத்துக்கு நாங்கள் எல்லாம் விளையாடுற மாதிரி பூங்கா அமைத்து தர வேண்டும் என்றார்கள்.
அவர்கள் கோரிக்கை வைத்த அன்றே ரூ.14 லட்சத்துடன் சிறுவர் பூங்கா அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. சென்ற முறை ஆய்வுக்கு சென்ற போது பூங்கா அமைக்கப்பட்டதா என்று கேட்டேன். ரெடியாகிவிட்டதாக கூறியிருந்தனர்" இவ்வாறு அமைச்சர் உதயநிதி அண்மையில் சட்டசபையில் பேசியிருந்தார்.

இந்நிலையில் சட்டசபையில் அமைச்சர் உதயநிதி பேசிய சில நாட்களில் தற்போது சிறுகூடல் பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில், 'பூங்கா வேண்டும் அண்ணா' என சிவகங்கை சிறுகூடல்பட்டி பெரியார் சமத்துவபுர சிறுமிகள் ஹாசினி-ஜெசிந்தா டிசம்பரில் என்னிடம் கோரிக்கை வைத்தனர். பணிகள் நிறைவடைந்து பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு துணைநின்ற அமைச்சர் அண்ணன் பெரியகருப்பன் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.

அத்துடன் சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இதில் பூங்காவிற்காக உதயநிதியிடம் கோரிக்கை வைத்த சிறுமி, அமைச்சர் பெரிய கருப்பன் பூங்காவை திறந்து வைத்த புகைப்படம், மற்றும் சிறுவர்கள் பூங்காவில் விளையாடும் புகைப்படம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. அமைச்சர் உதயநிதியின் இந்த செயலை பாராட்டியுள்ள பலர், இதேபோல் தமிழகத்தில் பல இடங்களில் பூங்காக்களைஅமைத்து தர வேணடும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications