கோடை முடிந்த பிறகும் கொளுத்தும் வெயில்
நெல்லை: நெல்லை மாவட்ட பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவ நிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. வெயில், மழை,காற்று வழக்கத்தை விட அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வெயில் உக்கிரமாக இருந்தது. இந்த வெயிலால் கடந்த சீசனில் நிரம்பி வழிந்த குளங்கள் வறண்டன. மீண்டும் வறட்சி தலை தூக்கியது. பின் தென் மேற்கு பருவ மழையால் ஓரளவு தண்ணீர் கிடைத்தது. தற்போது காற்று சீசனும் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வெயில் கொளுத்தி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது.
காற்று சீசன் இன்னும் 20 நாளில் நிறைவு பெற உள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் வறண்ட வானிலை தொடரும். இது அக்டோபர் இரண்டாவது வாரம் வரை நீடிக்கும். அதன் பிறகு வடகிழக்கு பருவமழை பெய்தால் நிலைமையை ஓரளவுக்கு சமாளிக்கலாம். இந்த வெப்ப தாக்கத்திற்கு புவி வெப்பமடைதலே காரணம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications