தனுஷ்கோடி வாழ்வதற்கு தகுதியற்ற இடமா..? நீதிபதிகள் செப்.17-ல் ஆய்வு!
தனுஷ்கோடி வாழ்வதற்கு தகுதியற்ற இடமா என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஆய்வு செய்யவுள்ளனர்.
மதுரை: தனுஷ்கோடி வாழ்வதற்கு தகுதியற்ற இடமா என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஆய்வு செய்யவுள்ளனர்.
1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி, தனுஷ்கோடியை பயங்கர புயல் தாக்கியது. இதில் 1,500 பேர் பலியானார்கள். ராமேசுவரத்தில், புயலின் வேகம் கடுமையாக இருந்தது. கடல் அலையும் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பொங்கி எழுந்ததில் தனுஷ்கோடி நகரம் மூழ்கி சின்னாபின்னமானது.
ரயில், ரயில் நிலையம், கோயில், வீடு, கடைகள் என அனைத்தையும் கடல் அலை வாரி சுருட்டிச் சென்றது. இதனால் தனுஷ்கோடி கிராம மக்கள் மட்டுமின்றி ரயிலில் பயணித்தவர்களும் அநியாயமாக உயிரிழந்தனர்.
தகுதியற்ற நகரமான தனுஷ்கோடி
இந்த பேரிடரை தொடர்ந்து தனுஷ்கோடி நகரம் மக்கள் வாழ தகுதியற்ற நகரமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் மட்டுமே தனுஷ்கோடிக்கு சென்றுவந்தனர்.
மீனவர்கள் மட்டுமே வசிக்கும்
சில மீனவர்கள் குடிசை அமைத்து மீன்பிடித் தொழிலை செய்து வந்தனர். இந்நிலையில் அப்துல்கலாம் மணிமண்டபம் திறக்கப்பட்டதை தொடர்ந்து தனுஷ்கோடி மீண்டும் மக்களின் பார்வையை பெற ஆரம்பித்துள்ளது.
தனுஷ்கோடியில் அடிப்படை வசதிகள்
இதனிடையே தனுஷ்கோடியில் அடிப்படை வசதிகள் செய்து தரகோரி திருமுருகன் என்பவர் தொடர்ந்தார். இந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு தனுஷ்கோடி மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
தனுஷ்கோடியில நீதிபதிகள் ஆய்வு
இதையடுத்து தனுஷ்கோடியில் ஆய்வு செய்ய நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் முடிவு செய்துள்ளனர். தனுஷ்கோடி வாழ்வதற்கு தகுதியற்ற இடமா..? அடிப்படை வசதிகள் செய்ய இயலுமா..? என்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஆய்வு செய்யவுள்ளனர். வரும் 17ஆம் தேதி நீதிபதிகள் தனுஷ்கோடியில் ஆய்வு நடத்தவுள்ளனர்.