போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.204 கோடி நிலுவைத்தொகையை நாளைக்குள் வழங்கவேண்டும்.. ஹைகோர்ட் அதிரடி!
போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு 204 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை நாளைக்குள் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு 204 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை நாளைக்குள் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மே மாதம் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தை நிறுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு 'வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் பணிக்கு வர மறுப்பவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

நீதிமன்றமே முன்வந்து
அப்போது மாயாண்டி சேர்வை என்ற போக்குவரத்து ஓய்வூதியதாரர் ஒருவர் ஓய்வூதியதார்களின் பிரச்சனையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடிதமாக எழுதினார். இதையடுத்து இந்த கடிதத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

ரூ.175 கோடி ஒதுக்கீடு
பின்னர் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அப்போது 379 கோடி ரூபாய் நிலுவைத் தொகையில் முதல் தவணையாக 175 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளாதாக தெரிவிக்கப்பட்டது.

நாளைக்குள் வழங்க வேண்டும்
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவைத் தொகையான ரூ.379 கோடியில் இரண்டாவது தவணையாக ரூ.204 கோடிக்கு நாளைக்குள் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனவரி 15ஆம் தேதிக்குள்
இதுதொடர்பாக அரசாணை பிறப்பித்து தொகையை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் 3வது தவணை தொகையை வழங்குவது தொடர்பாக ஜனவரி 3-ம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications