திருச்சி பிரேமானந்தா ஆசிரமத்தில் பெல்ஜியம் மாணவர் மர்ம மரணம்
இலங்கையைச் சேர்ந்த சாமியார் பிரேமானந்தா, திருச்சி அருகே விராலிமலை, பாத்திமா நகரில் ஆசிரமம் நடத்தி வந்தார். அங்கு பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுக் கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். வாழும்போது பல சர்ச்சைகளுக்கு ஆளான பிரேமானந்தா சிறையிலேயே இறந்துபோனார்.
பிரேமானந்தாவின் ஆசிரமத்தில் பல நாட்டு மாணவர்கள் தங்கி கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துபோனதுதான் திருச்சியை சுற்றியுள்ள வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர் மார்னிக்ஸ் கியூலன். இவர் பிரேமானந்தாவின் ஆசிரமத்தில் தங்கிக்கொண்டு திருச்சி கிருஸ்துராஜ் கல்லூரியில் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், ஆசிரமத்தில் உள்ள ஒரு அறையில் கியூலன் தூக்கில் தொங்குவதை ஆசிரமத்தில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர். இந்த தகவல் தெரியவே விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பிரேமானந்தா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது பாத்திமாநகரில் உள்ள பிரேமானந்தா ஆசிரமம் தமிழகம் முழுக்க பிரபலமாக பேசப்பட்டது. தற்போது பிரேமனந்தாவின் மரணத்திற்கு பிறகும் ஆசிரமம் பற்றிய சர்ச்சைகளுக்குள் ஆளாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.