காட்பாடியில் உடலில் ரத்த காயங்களுடன் தூக்கில் தொங்கிய வடமாநில இளைஞர்.. அடித்து கொலையா? என விசாரணை
காட்பாடியில் உடலில் ரத்த காயங்களுடன் தூக்கில் தொங்கினார்.
காட்பாடி: காட்பாடியில் வடமாநில இளைஞர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் தூக்கில் தொங்கி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ளது துரைநகர் பகுதி. இங்கு முள்புதரில் வடமாநில இளைஞர் தூக்கில் பிணமாக தொங்கியதை அங்குள்ள பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தூக்கில் தொங்கிய இளைஞரின் சடலத்தை மீட்டனர். உயிரிழந்த இளைஞருக்கு சுமார் 30 வயதிருக்கும் என கூறப்படுகிறது. ஜீன்ஸ் பேண்ட் மட்டும் அணிந்திருந்த அந்த இளைஞரின் முகம், மார்பு இடுப்பு பகுதியில் ரத்த காயங்கள் இருப்பதால், அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அவரது ஜீன்ஸ் பாக்கெட்டில் கவுகாத்திக்கு ரெயில்வே முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பம் மற்றும் 3 தொலைபேசி எண்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். அந்த எண்களில் தொடர்பு கொண்டபோது, 3 பேருமே இந்தி மொழியில் பேசியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனால் சமீப காலமாக குழந்தை கடத்தல் காரணங்களுக்காக வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதால், உயிரிழந்த இளைஞரும் குழந்தை கடத்தல் பீதியில் கொல்லப்பட்டிருப்பாரோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.