கோவை குட்கா: ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக எம்.எல்.ஏ., உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு
குட்கா ஆலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் செய்த திமுக எம்.எல்.ஏ.மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவைமாவட்டம், சூலூர் குட்கா ஆலை விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்த கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காகத் தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த குட்கா தொழிற்சாலை கண்டறியப்பட்டது. அங்கு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தியதில் போதை பாக்குகள் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 20 டன் மூலப்பொருட்கள் மற்றும் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 79 மூட்டைகள் குட்காவை பறிமுதல் செய்து சீல் வைத்தனர். எனவே இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர்.

இதனிடையே இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்த வலியுறுத்தி, சிங்காநல்லூர் திமுக எம்.எல்.ஏ. கார்த்திக், உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பொது இடத்தில் கூடுதல், அனுமதியின்றி போராட்டம் நடத்துதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் எம்.எல்.ஏ. கார்த்திக் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 7 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ. கார்த்திக் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications