சென்னை அண்ணாசாலையில் திடீர் பள்ளம்.. போக்குவரத்து பாதிப்பு
சென்னை அண்ணாசாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை: சென்னை, தேனாம்பேட்டை எஸ்ஐடிஇ கல்லூரி சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை திடீர் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சிமென்ட் கலவை மூலம் நிரப்பப்பட்டு அந்த பள்ளம் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.
சென்னை அண்ணாசாலை, தேனாம்பேட்டை எஸ்ஐஇடி சிக்னல் அருகே மெட்ரோல் ரயில் சுரங்கப்பணி நடந்து வருகிறது. இந்த பகுதியில் வெள்ளிக்கிழமை காலை திடீரென சாலையின் நடுவில் சுமார் 4 அடி அகலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது.

திடீரென ஏற்பட்ட பள்ளத்தை அறியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் தங்களது பைக் முன் சக்கரம் சிக்கி கொண்டு அதை மீட்க முடியாமல் கடும் அவதியடைந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் அண்ணா மேம்பாலம் வரை அணிவகுத்து நின்றது.

இதையொட்டி கல்லூரி, பள்ளி, வேலைக்கு செல்வோர் கடும் சிரமம் அடைந்தனர். தகவலறிந்த போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை சுற்றி தடுப்புகளை அமைத்து, வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மெட்ரோ ரயில் பணியாளர்கள் சிமென்ட் கலவை மூலம் அந்த பள்ளத்தை நிரப்பி மூடினர்.












Click it and Unblock the Notifications