ஜெ. மரணம்...விசாரணையின் முடிவில் உண்மை தெரியவரும் - விவேக்
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தேன் என்று விவேக் ஜெயராமன் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணையின் முடிவில் அனைவருக்கும் உண்மை தெரிய வரும் என்று இளவரசியின் மகனும் ஜெயாடிவி நிர்வாக இயக்குனருமான விவேக் ஜெயராமன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் விவேக் ஜெயராமன் இரண்டாவது முறையாக இன்று ஆஜரானார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விசாரணை நடைபெற்று வரும்போது வெளிப்படையாக எதையும் கூற முடியாது என்று கூறினார். வேறு கேள்விகள் ஏதாவது இருந்தால் கேளுங்கள் என்றும் அவர் கூறிவிட்டு விரைவாக சென்று விட்டார்.
ஆஜரான விவேக்
ஏற்கனவே கடந்த மாதம் 13ஆம் தேதி விவேக் ஜெயராமன் ஆஜரானார். அன்றைய தினம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. சிறுவயதில் இருந்து போயஸ் கார்டனில் வளர்ந்தவர் என்பதால், ஜெயலலிதாவின் உடல்நிலை, அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை உட்பட பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
கேள்வி கேட்ட ஆணையம்
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நேரத்தில் விவேக் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று வந்தவர் என்பதால் சிகிச்சை கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு விவேக் சொன்ன பதில்கள் முழுவதுமாக பதிவு செய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் பல கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களையே சொன்னதால் மீண்டும் ஆஜராகுமாறு விவேக் ஜெயராமனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இரண்டாவது முறையாக ஆஜர்
இதனைத் தொடர்ந்து, இன்று காலை விசாரணை ஆணையத்தில், விவேக் இன்று ஆஜரானார். அவரிடம், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை மேற்கொண்டார். ஜெயலலிதா போயஸ் கார்டனில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது யார்-யார்? உடன் இருந்தார்கள். செப்டம்பர் 22ஆம் தேதி போயஸ்கார்டனில் நடந்தது என்ன? ஜெயலலிதாவை எத்தனை முறை சென்று பார்த்து வந்தீர்கள். அப்போது உடன் இருந்தவர்கள் யார்-யார்? என்று கேட்டதாக தெரிகிறது.
கிடுக்கிப் பிடி விசாரணை
போயஸ்கார்டனின் குழந்தையாக இருந்தது முதல் வளர்ந்தவர். ஜெயலலிதாவினால் பாசமாக வளர்க்கப்பட்டவர் விவேக். ஜெயலலிதா உடன் விவேக் இருந்த புகைப்படங்கள் இப்போது வெளியாகி வருகின்றன. இதனால் போயஸ்கார்டனிலும், அப்பல்லோ மருத்துவமனையிலும் நடந்தவைகள் விவேக்கிற்கு தெரியாமல் இருக்காது என்பது பலரது சந்தேகம். இதன்காரணமாகவே நீதிபதி ஆறுமுகசாமியும் தனது விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்.
விசாரணை முடிவில் தெரியும்
ஆணையத்தில் இன்று 2 மணி நேரத்திற்கு மேலாக விவேக்கிடம் விசாரணை நடைபெற்றது. ஜெயலலிதா தொடர்புடைய பல வீடியோக்கள் விவேக் வசம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீடியோக்கள், போட்டோக்களைப் பற்றியும் ஆணையம் எழுப்பியதாக தெரிகிறது. ஆஜராகிவிட்டு வெளியே வந்த விவேக், விசாரணையின் முடிவில் உண்மை வெளியே வரும் என்று கூறிவிட்டு விடுவிடுவென சென்று விட்டார்.