தஞ்சை அருகே போலீஸ் எஸ்.ஐ வீட்டு கதவை உடைத்து 50 பவுன், ரூ.4 லட்சம் திருட்டு
தஞ்சாவூர்: திருச்சி போலீஸ் எஸ்ஐ வீட்டில் கதவை உடைத்து 50 பவுன் நகை, ரூ.4 லட்சம் திருடிச்செல்லப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் கல்லணை அடுத்த மேகளத்தூரை சேரந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவரது மூத்த மகன், கண்ணனும் விவசாயி. இளைய மகன் சேகர், திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார்.
சேகர், நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றுவிட்டார். கோவிந்தராஜ், கண்ணன் ஆகியோர் அன்று இரவு குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தனர்.
நேற்றுகாலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 75 பவுன் நகைகள் ரூ.4 லட்சம் கொள்ளை போனது என்று கண்ணன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் திருக்காட்டுப்பள்ளி மற்றும் தோகூர் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது வீட்டில் வேறு இடத்தில் வைத்திருந்த 25 பவுன் நகைகள் அப்படியே இருந்தது. அதனால் பீரோவில் 50 பவுன் நகைகள் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.