டாஸ்மாக்கை உடைத்து "புல் பாட்டில்"களை மட்டும் திருடிய நூதன ‘குடி’மகன்கள்!
கோவை: கோவை அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இத்தேர்தலை அமைதியாக நடத்த கடந்த சனிக்கிழமை முதலே டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்மநபர்கள் சிலர், நேற்று இரவு கோவை அருகே சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து உள்ளே இருந்த மதுபாட்டில்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
அதிலும் வித்தியாசமாக குவார்ட்டர் பாட்டில்களை விட்டு விட்டு அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் மதுபானப் பாட்டில்களை மட்டும் அவர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
இன்று காலை டாஸ்மாக் கடையின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த சிங்காநல்லூர் போலீசார், கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது கடையில் உள்ள மொத்த இருப்பு 11லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் எனவும் திருடுபோன மதுபானங்ளின் மதிப்பு தெரியவில்லை எனவும் ஊழியர்கள் போலீசாரிடம் கூறியதாகத் தெரிகிறது.
அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications