விஜயகாந்த் பூஜ்ஜியம் என்றால் அவரை சந்திக்க பாஜகவினர் தவம் கிடந்தது ஏன்?.... கேட்பது வைகோ!
சென்னை: விஜயகாந்த் பூஜ்ஜியம் என்றால் அவரை சந்திக்க பாஜக தலைவர்கள் தவம் கிடந்தது ஏன்? என்று மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
தேமுதிக - மக்கள் நல கூட்டணி இடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கடும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறும் போது, தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு விரோதமாகவும், நலனுக்கு எதிராகவும் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் அமையப்போவது இல்லை. எனக்கு ஒரு தமாஷ் நினைவுக்கு வருகிறது அவர் தான் மாப்பிள்ளை, ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னது என்று கூறினார்.
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறும்போது, இது ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலை இல்லை. பூஜ்ஜியத்துடன் பூஜ்யம் சேர்ந்தால் எந்த மதிப்பெண்ணும் இல்லை. அதுபோன்ற நிலைதான் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறும்போது, இது சந்தர்ப்பவாத கூட்டணி. எதிர்க்கட்சி தலைவராக செயல்பட முடியாத விஜயகாந்த் தற்போது முதல்-அமைச்சராக வந்து என்ன முடிவு எடுப்பார் என்றார்.
காந்தீய மக்கள் இயக்க நிறுவன தலைவர் தமிழருவி மணியன் கூறும்போது, விஜயகாந்தின் முதுகுக்கு பின்னால் அரசியல் நடத்துவது என்ற நிலைப்பாட்டால் வைகோ தனக்கான வீழ்ச்சியை தானாகவே உருவாக்கி கொண்டார் என்றார்.
இந்த விமர்சனம் பற்றி கருத்து கூறிய வைகோ, தமிழிசையின் கருத்துக்கு கொந்தளித்தார். கொந்தளித்தார். அதே நேரத்தில் தமிழருவியின் கருத்துக்கு பதில் சொல்லவில்லை.
அது பரம ரகசியம்
மக்கள் நலக் கூட்டணியும், தே.மு.தி.க.வும் உடன்பாடு ஏற்படுவது குறித்து எவ்வாறு ரகசியமாக வைத்திருந்து கடைசியில் தெரியப்படுத்தினாமோ அது போலத்தான் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதையும் வெளிப்படையாக சொல்ல முடியாது. ஆனால் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறோம் என்றார்.
தவம் கிடந்தது ஏன்?
தமிழிசை என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார். அவர் இருக்கக்கூடிய பொறுப்பில் இருந்து கொண்டு அவ்வாறு பேசுவது நாகரீகமல்ல. அவரை அந்த பதவிக்கு எப்படி தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை. விஜயகாந்த் பூஜ்ஜியம் என்றால் அவரை சந்திக்க தவம் கிடந்தது ஏன் என்று கேட்டார் வைகோ.
கலைஞர் மாறிவிட்டார்
உண்மையிலேயே கலைஞரை பார்த்து நான் அனுதாபப்படுகிறேன். பல்வேறு கட்டங்களில் இளம் வயதில் இருந்து நான் அவருடன் போராட்டங்களில் பங்கேற்று இருக்கிறேன். 29 வருடங்கள் கலைஞருடன் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளேன். ஆனால் அவர் இப்போது மாறி விட்டார். மக்களுக்காக உழைத்த அவர் இப்போது குடும்பத்திற்காக உழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவருடைய நிலை பரிதாபத்திற்குரியது என்று வைகோ கூறியுள்ளார்.
திருமாவளவன் பேச்சு
மக்கள் நலக்கூட்டணி - தே.மு.தி.க. இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. இனி தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம். ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி நாங்கள் தொகுதிகளை பகிர்ந்து கொள்வோம்.
ஜி.கே.வாசன் - கிருஷ்ணசாமி
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கு அழைப்பு விடுத்து இருந்தோம். அவர் இந்த மாத இறுதியில் பதில் சொல்வதாக கூறியுள்ளார். பாரிவேந்தரும், டாக்டர் கிருஷ்ணசாமியும் தே.மு.தி.க. அணியில் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
அதிமுக ஆதரவு அணியா?
மக்கள் நலக்கூட்டணி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக விமர்சனங்கள் வருகின்றன. நாங்கள் அதிமுகவையும் அதன் தலைமையையும் எதிர்த்து தான் பேசுகிறோம்.
பொய் குற்றச்சாட்டு
அதிமுகவிற்கு சாதகமாக செயல்பட்டால் எங்கள் அணியில் எப்படி விஜயகாந்த் சேருவார். இதில் இருந்தே அது பொய்யான குற்றச்சாட்டுகள் என தெளிவாகிறது. மக்களுக்காக உருவாக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி வெற்றிக்கு தான் பாடுபடுகிறோம். வேறு எந்த அணி வெற்றிக்கும் பாடுபடாது.