சபரிமலைக்கு மாலை போட்ட சிறுமி பலாத்காரம் செய்து கொலை: 3 கொடூரர்கள் கைது
தேனி: சபரிமலைக்கு மாலைபோட்டிருந்த பத்து வயது சிறுமியை மூன்று காமுகர்கள் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது காமாட்சிபுரம். இங்குள்ள பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன்-காளீஸ்வரி தம்பதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவன்,மனைவி, இரண்டு குழந்தைகளுடன் கேரளா மாநிலத்திற்கு கூலி வேலைக்கு சென்றுவிட்டு வாரம் ஒருமுறை மட்டும் விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்து செல்வார்கள்.
இவர்களின் மூத்த மகள் நந்தினி (வயது 10). பாட்டி பராமரிப்பில் காமாட்சிபுரம் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தாள். நந்தினியின் தந்தை கணேசன் கடந்த 9 வருடமாக ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு தனது மகளுக்கும் மாலை அணிவித்து ஐயப்பன் கோவிலுக்கு அழைத்து செல்ல முடிவு செய்து கடந்த கார்திகை மாதம் முதல்நாளே மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார். மகள் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதால் கேரளாவிற்கு செல்லாமல் ஊரில் கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 1ஆம்தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய நந்தினி புத்தகபையை வீட்டில் வைத்து விட்டு பெரியம்மா வீட்டுக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றாள். வெகுநேரமாகியும் நந்தினி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் நந்தினி கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் கணேசன் புகார் செய்தார்.
போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்தநிலையில் அதே பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் நந்தினியின் சடலம் மிதப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.
பரிசோதனையில் மாணவி நந்தினி பாலியல் பலத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் இதே பகுதியை சேர்ந்த ரவி, சுந்தராஜ், குமரேசன், ஆகியோர் மூன்று பேரும் இந்த கொடூர செயலை செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். கோவிலுக்கு மாலை அணிந்திருந்த சிறுமி என்றும் பாராமல் பலாத்காரம் செய்து கொன்றுள்ளது தேனி மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. மகளை இழந்த தாய் காளீஸ்வரி தினமும் அழுதவண்ணம் உள்ளார். நந்தினியின் புத்தக பையை அருகில் வைத்துக்கொண்டு சோகத்துடன் இருக்கிறார்.
மகளின் மரணம் குறித்து கூறிய நந்தினியின் தாய் காளீஸ்வரி, எனது மகளுக்கு 10 வயது ஆகிறது. மகள் பெரியவளாகும் முன் ஐயப்பன்கோவிலுக்கு அழைத்து செல்லவேண்டும் என்று கருதி நந்தினிக்கு மாலை அணிவித்து அவரது தந்தை விரதத்தை தொடங்கினார். முதல் முதலாக மாலை அணிவிப்பதால் கன்னி சாமியாக சபரிமலைக்கு செல்லவேண்டும் என்று காத்து இருந்தோம். எங்கள் தலையில் இடி விழுந்தது போல் என் மகள் சாவு உள்ளது என்று கதறி துடித்து வருகிறார்.
எனது மகள் சபரிமலைக்கு செல்லும்வரையில் வெளியில் சென்று தங்கி வேலை செய்வதை நிறுத்திவிட்டு உள்ளூரில் வேலைக்கு சென்று வந்தோம். இப்படி பட்டநிலையில் அரும்பை அழித்த மூன்று அரக்கன்களுக்கு கொடிய தண்டனை வழங்கவேண்டும். அப்போதுதான் எனது மகளின் ஆத்மா சாந்தியடையும். பள்ளியில் படிப்பில் கெட்டிகாரியாக திகழ்ந்தாள்.
அவளது லட்சியம் டாக்டராகி கிரமத்திலே தங்கி அனைத்து மக்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிப்பேன் என்று என்னிடத்தில் அடிக்கடி கூறுவாள், அவளது ஆசை நிறைவேறாமல் போய் விட்டதே என்று கூறி கதறி அழுதார். காணமல்போன அன்று வீட்டில் வந்து புத்தகபையை வைத்து விட்டு வீடு திரும்பாமல் போனதால் புத்தகபையை வைத்துக் கொண்டு தாய் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது வருகின்றனர். நந்தினியின் சாவுக்கு காரணமான 3 காமுகர்களுக்கும் கொடும் தண்டனை வழங்கவேண்டும் என்று பெற்றோரும், கிராம மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.