எச்ஐவி' இல்லா சான்றிதழ் தந்தால்தான் திருமணம்..: உயர்நீதிமன்றம் பாராட்டிய தேனி கிராமம்

தேனி மாவட்டத்தில் உள்ளது கருங்கட்டான்குளம் என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் மறவர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 1542 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு கடந்த 2007ம் ஆண்டு முதல் திருமணத்திற்கு முன்னர் கட்டாய மருத்துவச் சான்றிதழ் வழங்கும் முறை அமல் படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டுவாக்கில், லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் அதிகம் வாழும் இந்தக் கிராமத்தில் அதிக குழந்தைகள் எச்.ஐ.வி. பாதிப்போடு பிறந்துள்ளனர். மேலும், எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு அதிக ஆண்கள் இளவயதிலேயே மரணத்தைத் தழுவியதால் அதிகளவிலான பெண்கள் விதவைகளாக ஆகியுள்ளனர். எனவே, இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் கட்டாய மருத்துவச் சான்றிதழ் திட்டத்தை அவ்வூர்த் தலைவர்கள் கொண்டு வந்துள்ளனர்.
இதன்படி, இங்குள்ள மறவர் மக்கள் மன்றத்தில் திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் தங்களுக்கு எச்ஐவி இல்லை என திருமணத்துக்கு முன் சங்க நிர்வாகிகளிடம் சான்றிதழ் வழங்க வேண்டும். திருமணத்துக்கு பதிவு செய்யும்போது எச்ஐவி பரிசோத னைக்காக சங்கம் சார்பில் மணமகன், மணமகள் பெயர்கள் எழுதப்பட்ட விண்ணப்பம் தரப்படும். அந்த விண்ணப்பத்தை அரசு மருத்துவமனையில் வழங்கினால், இருவருக்கும் எச்ஐவி பரி சோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். அதை சங்க நிர்வாகிகளிடம் அளிக்க வேண்டும். சான்றிதழில் எச்ஐவி இல்லை என குறிப்பிட்டிருந்தால் மட்டுமே திருமணம் நடைபெறுமாம்.
உடல்நலக் கோளாறுகளால் திருமணங்கள் தோல்வியில் முடிவதைத் தடுக்கும் வகையில் திருமணத்திற்கு முன் ஆணுக்கும், பெண்ணுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தும் திட்டம் தொடர்பான விசாரணை மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்து வருகிறது.
இந்த விசாரணையின் போது வழக்கறிஞர் ஒருவர் கருங்கட்டான்குளம் கிராம மக்களின் வழக்கம் பற்றி கூறினார். அதைக் கேட்ட நீதிபதி அக்கிராமத்தின் செயலைப் பாராட்டினார்.












Click it and Unblock the Notifications