தினகரனை ஒதுக்கி வச்சாச்சு.. முடிவில் உறுதியா உள்ளோம்.. அமைச்சர் ஜெயகுமார்
தினகரனை ஒதுக்கி வைப்பது என்று தொடர்பாக கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி எடுக்கப்பட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
சென்னை: தினகரனை விலக்கி வைப்பது என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதில் ஆணித்தரமாக உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் என்று நிதியமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னத்தைுக்கு லஞ்சம் அளித்த வழக்கில் வெளியே வந்த தினகரனுடன் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, தோப்பு வெங்காடசலம், தங்கதமிழ்ச் செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றும் கட்சித் தலைமைக்கு எதிராக பேசிய அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி, தங்கமணி, வீரமணி உள்ளிட்டோரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் ஆலோசனையில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனிடையே ஜெயகுமாரை தினகரன் விமர்சித்தது அமைச்சர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் இன்று சந்திக்க சென்றுள்ளார். இச்சமயம் அமைச்சர் ஜெயகுமார் அறையில் 20 அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்த சந்திப்பை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி கட்சியின் நலன் கருதி அமைச்சர் தங்கமணி வீட்டில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் தினகரன் மற்றும் அவரை சார்ந்தவர்களை கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்க முடிவு செய்தோம்.
அதேபோல் தினகரனும், அதிமுக ஆட்சி தொடர வேண்டு்ம என்பதற்காக கட்சியில் இருந்து ஒதுங்கி கொள்கிறேன் என்றும் தன்னால் எந்த வித இடையூறு்ம ஏற்படாது என்றும் தினகரன் தெரிவித்ததில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
நாங்கள் அவர்களுடன் இல்லை. அவர்களைச் சார்ந்தும் இல்லை. தினகரன் தலையீடு இல்லாமல் ஆட்சி நடத்துகிறோம். முதல்வர் எடப்பாடியும் சிறப்பாக செயல்படுகிறார். எனவே நாங்கள் தினகரனை விலக்கி வைத்த முடிவில் எந்த வித மாற்றமும் இல்லை. அவர்களை சார்ந்து நாங்கள் இல்லை என்றார் அவர்.