அரவக்குறிச்சி காங்.,ஒதுக்காததற்கு அதிருப்தி.. போட்டியில் இருந்து விலகபோவதில்லை: ஜோதிமணி அறிவிப்பு
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டன. இதில், காங்கிரஸ் கட்சிக்கு அரவக்குறிச்சி தொகுதியை தி.மு.க ஒதுக்காததால் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி எந்த கூட்டணியில் இடம்பெறும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அரவக்குறிச்சி தொகுதியில் 'தீவிரமாக' தேர்தல் களப்பணியாற்றிவர் ஜோதிமணி.
இதனிடையே தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. அதன் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகளை ஒதுக்கியது திமுக. தற்போது காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்ற பட்டியலும் இன்று வெளியிடப்பட்டன.
இதில், காங்கிரஸ் கட்சிக்கு அரவக்குறிச்சி தொகுதியை தி.மு.க ஒதுக்காததால் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார் ஜோதிமணி.
இது தொடர்பாக இன்று அவர் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதாவது:
அரவக்குறிச்சி தொகுதியில் மட்டுமே போட்டியிடும் எனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நான் தொடர்ந்து வாக்கு சேகரித்து வருகிறேன் எனக்காக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நண்பர்கள் அதே வேகத்தோடு முழுவீச்சில் தொடர்ந்து செயல்படும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நாம் ஒரு நேர்மையான, எளிமையான மக்களை மையப்படுத்திய அரசியலை முன்நிறுத்தி கடந்த ஒன்பது மாதங்களாக மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். அந்த நம்பிக்கையை நாம் எக்காரணத்தை முன்னிட்டும் இழக்கமுடியாது. காங்கிரஸ் கட்சி சரியான முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு ஜோதிமணி பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.