ஒதுக்கி வச்சது வச்சதுதான்.. தினகரனை கட்சி நிர்வாகிகள் யாரும் சந்திக்கக் கூடாது: ஜெயக்குமார் அதிரடி
டிடிவி தினகரன் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டது ஒதுக்கப்பட்டதுதான் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் மற்றும் அவர் சார்ந்தவர்கள் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டது ஒதுக்கப்பட்டதுதான் அதில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக நிர்வாகிகள் யாரும் டிடிவி தினகரனை சந்திக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
திஹார் சிறையில் இருந்து வெளியே வந்த கையோடு கட்சிப் பணியை தொடரப்போவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். ஏற்கனவே கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டவர், ஒதுங்கி விட்டதாக அறிவித்தவர் மீண்டும் கட்சிப்பணிகளை தொடரப் போவதாக தெரிவித்தது அதிமுக அம்மா அணியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னை வந்த டிடிவி தினகரன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க சென்றார். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.

ஒதுக்கியதில் மாற்றமில்லை
இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கியதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

தினகரன் ஒதுங்க வேண்டும்
தினகரனை நம்பி கட்சி இல்லை என்றும் அவர் கூறினார். தினகரன் கட்சியில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

யாரும் சந்திக்க மாட்டார்கள்
மேலும் டிடிவி தினகரனை கட்சியில் உள்ள யாரும் சந்திக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். யாருடைய பின்னணியும் இன்றி ஜெயலலிதா வழியில் கட்சியை நடத்துவதாகவும் அவர் கூறினார்.

எந்த தொடர்பும் இல்லை
தினகரன் சார்ந்தவர்களும் ஒதுக்கி வைத்து முழுமையான நல்லாட்சி நடைபெறுவதாகவும் ஜெயக்குமார் கூறினார். தினகரனுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications