அதிமுக எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் தங்கியுள்ளதில் தப்பில்லையாம்.. சொல்வது காங். எம்எல்ஏ
தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் புதுவையில் தங்கியுள்ளதில் எந்த தவறுமில்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி தெரிவித்தார்.
சென்னை: முதல்வருக்கு எதிராக ஆதரவை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் புதுவையில் உள்ள விடுதியில் தங்கியுள்ளதில் எந்த தவறும் இல்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி தெரிவித்தார்.
அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தது. அப்போது சசிகலாவை நீக்க பொதுக் குழு கூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் நேற்று ஆளுநரை சந்தித்து முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.
இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் பலம் 113-ஆக குறைந்தது. பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்எல்ஏ-க்கள் தேவை. இதனால் எடப்பாடி அரசு மீண்டும் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ளனர்.
அதன்படி காங்கிரஸ் கட்சி எம்எ்லஏ-க்களின் சட்டமன்ற குழுத் தலைவர் ராமசாமி உள்பட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். அதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மை இல்லை. எனவே அந்த அரசு மீது மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.
ஆளுநரை சந்தித்த பின்னர் விஜயதாரணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இருக்காது என்பது உணரக்கூடியதே. இதனால் பாதுகாப்பு கருதி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் புதுவையில் தங்கியுள்ளனர். இதில் தவறு ஏதும் இல்லை என்றார்.
சமீபத்தில் தினகரனின் மாமியார் சந்தானலட்சுமி அம்மாள் மரணமடைந்ததை தொடர்ந்து தினகரன் வீட்டுக்கு சென்ற விஜயதாரணி துக்கம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.