வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை : வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நாளிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தமிழகத்தின் முக்கிய அருவிகளில் நீர் பெருக்கெடுத்து கொட்டுவதால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. எனினும் சில மாவட்டங்களில் வெயில் கொளுத்தியும் வருகிறது.
இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றம் புதுச்சேரியில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை, இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக சின்னக்கல்லார், தேவாலா -3 செ.மீ , கீரனூர், வால்பாறை-2 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.