தூத்துக்குடி- மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மீண்டும் கொள்ளை: தொடரும் அவலம்!
தருமபுரி: தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே ரயிலில் மீண்டும் நகைக் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
தொப்பூர் அருகே கடந்த சில தினங்களுக்கு முன் ரயிலில் 3 பெண்களிடம் 17 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று தொப்பூரில் தூத்துக்குடி-மைசூர் ரயிலில் மீண்டும் பெண் பயணியிடம் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
தென்காசியை சேர்ந்த பெண் பயணி பூங்கனியிடம் 7 சவரன் தங்க சங்கிலியை கொள்ளையர்கள் ரயிலின் ஜன்னல் வழியாக கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ரயில் பயணி பூங்கனி கொடுத்த புகாரையடுத்து தருமபுரி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து மேட்டுப் பாளையத்துக்கு சென்ற நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.
மே 3ம் தேதி சனிக்கிழமையன்று அதிகாலை 2.55 மணி யளவில் சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த மாவேலிபாளையம் என்ற இடத்தில் அந்த ரயில் சென்றபோது திடீரென நின்றது. அப்போது எஸ் 4, எஸ் 6, எஸ் 7 பெட்டிகளில் இருந்து 5 பேர் கொண்ட கும்பல் இறங்கி ஓடியுள்ளது.
கத்திமுனையில் கைவரிசை
தகவல் அறிந்த டிக்கெட் பரிசோதகர் மற்றும் கார்டு ஆகியோர் சம்பந்தப்பட்ட பெட்டிகளுக்கு சென்று விசாரணை நடத்தியபோது, தப்பி ஓடிய கும்பல் ரயிலில் இருந்த சென்னையைச் சேர்ந்த சித்ரா, ஜெயந்தி, பத்மாவதி ஆகிய மூன்று பெண்களையும் கத்திமுனையில் மிரட்டி 10 பவுன் நகையை பறித்துச்சென்றது தெரியவந்தது.
மேலும், கொள்ளையடிக்க வசதியாக ரயிலின் குளிர்சாதன பெட்டிக்கும், பொதுப் பெட்டிக்குமான இணைப்பை மர்ம கும்பல் துண்டித்து ஏர் லாக் செய்துள்ளனர். இதை அறிந்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியபோதுதான் அந்த கும்பல் ரயிலில் இருந்து தப்பி ஓடியது தெரியவந்தது.
தொடரும் ரயில் கொள்ளை
ரயிலில் கொள்ளையடித்த கும்பலைப் பிடிக்க ரயில் பயணிகள் பெரிதும் முயற்சித்தனர். ஆனால், இருட்டாகவும் காட்டுப் பகுதியாகவும் இருந்ததால் அந்தக் கும்பலை அவர்களால் பிடிக்க முடியவில்லை.
தற்போது மீண்டும் ரயில் பயணிகளிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்ததால் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது.