பேய்க்கரும்பில் உறங்கும் பேரன்பு கலாம்.. பிரமாண்ட நினைவிடம்.. என்ன சிறப்பு தெரியுமா?
மறைந்த அப்துல்கலாமின் நினைவிடம் தயார் நிலையில் உள்ளது, அதனை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27ம் தேதி மக்கள் மரியாதை செலுத்தசெல்ல திறந்து வைக்கப்பட உள்ளது.
ராமேஸ்வரம் : பேய்க்கரும்பு மண்ணில் புதைக்கப்பட்டுள்ள டாக்டர் அப்துல் கலாமின் உடல் இருக்கும் இடத்தில் சிறப்பான நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 27, 2015ம் ஆண்டு ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த அங்கேளே உயிரிழந்தார் இளைஞர்களே நாட்டின் எதிர்காலம் என்று ஓயாமல் சொல்லி வந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம். செயலில் குழந்தைத் தனம் இருந்தாலும், செயல்பாட்டில் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதிலேயே திண்ணமாக இருந்தவர், எளிமையின் அடையாளமாக இருந்த கலாம் தான் முன்னாள் குடியரசுத் தலைவர் என்று எங்குமே அதிகாரம் செய்தவர் இல்லை.
தமிழ்நாட்டின் கடைக்கோடி ஊரான ராமேஸ்வரத்தில் பிறந்து உலக அளவில் அனைவர் மனதிலும் இடம் பிடித்த அப்துல் கலாம் 83 வயதில் மரணமடைந்த நிலையில் அவரது உடல் ராமேஸ்வரம் அருகேயுள்ள பேய்க்கரும்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கலாமின் இரண்டாமாண்டு நினைவு நாள் நாளை மறுதினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் அவரது நினைவு மண்டபம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது.

பிரம்மாண்ட நினைவிடம்
மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகள் மையம் சார்பில் கட்டப்பட்டுள்ள கலாம் நினைவிடம் ரூ.15 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கலாம் உடல் புதைக்கப்பட்ட இடத்தை மைய இடமாக வைத்து கல்லறை கட்டப்பட்டுள்ளது. நினைவிடத்தை சுற்றியும் தென்னை மற்றும் இதர மரங்களைக் கொண்டு ஒரு வழிபாட்டு தீவு போல இந்த இடம் மாற்றப்பட்டுள்ளது.

கலாம் சிலை, அக்னி ஏவுகணை
7 அடி உயர வெண்கலச் சிலை நினைவிட கட்டிடத்தில் இடம் பெற்றுள்ளது. இதே போன்று 45 அடி உயரத்தில் 4 அக்னி-II ஏவுகணை கற்சிலைகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இது சுற்றுலாப் பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் கலாமின் சாதனைகளை எடுத்துச் சொல்வதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நடமாடும் அறிவியல் அருங்காட்சியகம்
இதே போன்று ஜூலை 27ம் தேதி கலாம் 2020 அறிவியல் வாகனமும் தனது சேவையைத் தொடங்குகிறது. இது ஒரு நடமாடும் கலாம் அருங்காட்சியகம், இதில் கலாமின் கட்டுரைகள், புகைப்படங்கள், அவரது அறிவியல் சாதனைகளை ஏந்திச் சென்று மக்களிடையே அறிவியல் புகட்டும் முயற்சியாக செய்யப்பட்டுள்ளது.

எதிர்கால சந்ததிக்கு சிறந்த இடம்
கலாம் நினைவிட மண்டபத்திற்குள் கலாமின் பொன்மொழிகள், புகைப்படங்கள் அவரின் ஆடைகளும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் பளிங்கு, டைல்ஸ் பதிக்கப்பட்ட கற்களால் மின்னும் கலாம் நினைவிடம் எதிர்கால சந்ததியினருக்கு டாக்டர். ஏ பி ஜே அப்துல்கலாமின் வாழ்வியல் சிறப்புகள் மக்களுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த இடமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications