'கேப்டனை'த் தொடர்ந்து வைகோ, வாசனையும் சந்தித்தார் திருமா!
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் ஆகியோரைச் சந்தித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடக்கவுள்ள கருத்தரங்கில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார் அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.
கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் ஜுன் 9-ம் தேதி கருத்தரங்கு நடக்க உள்ளது. இந்த கருத்தரங்குக்கு திமுக, அதிமுக, பாமக, பாஜக தவிர மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று முன்தினம் சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்தை, அவரது கோயம்பேடு அலுவலகத்தில் சந்தித்தார். பின்னர், மாலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுத்தார் திருமாவளவன்.
இந்நிலையில், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை திருமாவளவன் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கருத்தரங்கில் பங்கேற்க ஜி.கே.வாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications