ஜெயலலிதா அறிவிப்புக்கு காங்கிரஸ், கம்யூ, விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்பு
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டாம் என்று முதல்வர் ஜெயலலிதா அதிமுகவினரை கேட்டுக் கொண்டுள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது அவர்கள் இருவரும் 50 நிமிடங்கள் என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பிய தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை கண்டித்து அதிமுகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
போராட்டத்தின்போது அவர்கள் இளங்கோவனின் உருவபொம்மை, புகைப்படங்களை எரித்து வருகிறார்கள்.

ஜெயலலிதா
காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை கண்டித்து கட்சியினர் யாரும் போராட்டங்களை இனியும் தொடர வேண்டாம் என்று ஜெயலலிதா அதிமுகவினரை கேட்டுக் கொண்டுள்ளார்.

திருமா
இளங்கோவனுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுமாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இளங்கோவன் அவ்வாறு கூறியது தவறு என்றாலும், அதிமுகவினர் போராட்டம் நடத்துவதும் சரி அல்ல என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முத்தரசன்
இளங்கோவனை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டாம் என்ற ஜெயலலிதாவின் உத்தரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வரவேற்றுள்ளார். போராட்டம் வேண்டாம் என்று முன்பே தெரிவித்திருந்தால் அரசியல் நாகரிகம் முன்பே காப்பற்றப்பட்டிருக்குமே என்று அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ்
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் அதிமுகவினரை போராட்டங்களை கைவிடுமாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications