எடப்பாடி பாடி லாங்வேஜை பாருங்க.. அதிமுகவை பாஜக தலைமை தாங்கும் நிலை வந்துருச்சு.. திருமாவளவன் ஆதங்கம்
தஞ்சாவூர்: "எடப்பாடி பழனிசாமியை பக்கத்தில் உட்காரவைத்துக் கொண்டு கூட்டணி குறித்து அமித் ஷா பேசுகிறார், தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியை பாஜக தலைமை தாங்கி வழிநடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது" என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரோடு பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து திருமாவளவன் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமையகம் நுழைவு வாயிலில், தந்தை பெரியார், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சீரமைத்த புதிய வெண்கல திரு உருவச் சிலைகளை திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி ஆகியோர் திறந்து வைத்தனர்.
அதைத்தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் உரையாற்றுகையில், “திமுக தொடர்ந்து ஆட்சியில் இருக்கிற ஒரு அரசியல் இயக்கம். அக்கட்சிக்கு இன்னொரு கட்சி முட்டுக்கொடுக்க வேண்டும் என்கிற தேவை இல்லை. அந்தளவுக்கு திமுக பலவீனமாக இல்லை. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் திமுகவை எதிர்த்து பேசுகிறார்கள் என்றால் அதை திமுக எதிர்கொள்ளும். ஆனால் திமுகவும் நாமும் பேசுகிற அரசியல் கோட்பாட்டை எதிர்க்கிறார்கள் என்றால் அதை வேடிக்கை பார்க்க முடியாது.
என்னிடம் கூடுதலாகத் தொகுதி தருகிறோம். ஆட்சியில் பங்கு தருகிறோம். திமுக அணியை விட்டு வெளியே வாருங்கள் என ஆசைகாட்டினார்கள். என்னை அசைத்து பார்த்தார்கள் அசைக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ஊசலாட்டத்தில் நாங்கள் இல்லை.
நான் மிகவும் வளைந்து கொடுக்கக்கூடியவன் தான். ஆனால் என்னை ஒருபோதும் ஒடித்துவிட முடியாது. முறித்துவிட முடியாது. என்னை ஒரு துருப்புச் சீட்டாக வைத்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உடைத்து விடலாம் எனக் கணக்குப் போட்டார்கள். அசைத்துப் பார்த்தார்கள், அசைக்க முடியவில்லை. திருமாவளவன் More Flexible, But More Strong.
அதிமுக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார் என்றால், அவர் தான் கூட்டணியை அறிவித்து இருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு கூட்டணி குறித்து அமித் ஷா பேசுகிறார். தமிழ்நாட்டில் கூட்டணியை எடப்பாடி பழனிசாமி பேசினால் சரி, ஆனால் அமித் ஷா பேசுகிறார்.
தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியை பாஜக தலைமை தாங்கி வழிநடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி உடல் மொழியும், அமித் ஷாவின் உடல் மொழியும் எப்படி இருந்தது என்று பாருங்கள். ஒரு பெரிய திராவிட இயக்கமான அதிமுகவை அழித்து விட்டால், அடுத்த பெரிய சக்தியான திமுகவை வீழ்த்தி விட முடியும் என்பது அவர்கள் கணக்கு." எனப் பேசியுள்ளார்.
மேலும், "அதிமுகவை மிரட்டி கூட்டணிக்கு பாஜக பணிய வைத்து இருக்கிறது. கூட்டணி ஆட்சி அமைப்போம் என அமித்ஷா அறிவிக்கிறார். யார் தலைமையில் கூட்டணி என்ற சந்தேகம் எழுகின்றது. கூட்டணி ஆட்சி அமைக்க போகிறோம் என எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை. இதில், அதிமுகவின் ரோல் என்ன? அதிமுக தொண்டர்கள் இதை மனப்பூர்வமாக ஏற்கவில்லை என நினைக்கிறேன். இந்த கூட்டணியால் திமுக கூட்டணிக்கு எதிராக எந்த தாக்கமும் ஏற்படாது. பாஜக அல்லாத கூட்டணியை அமைக்க எடப்பாடி முயற்சித்தார். ஆனால், அது முடியவில்லை. அதிமுகவிற்கு ஏதோ நெருக்கடியை பாஜக கொடுத்து இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications