வைகோ மீதான தாக்குதல் முயற்சி அறுவறுக்கத்தக்கது: திருமாவளவன் கண்டனம்
வைகோவிற்கு எதிராக சிங்களர்களின் அணுகுமுறைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சி: ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு எதிராக சிங்களர்களின் அணுகுமுறைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் வைகோ மீது சிங்களர்களின் தாக்குதல் அறுவறுக்கத்தக்கது என்றார்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: "ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைப் பேரவைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெறும் இக்கூட்டத்தில், அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகளும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அனுமதிக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களும் கலந்துகொண்டு, உலகம் தழுவிய அளவில் பல்வேறு பிரச்னைகள்குறித்து விவாதிப்பது நடைமுறையாகும். அந்த வகையில், தற்போது நடைபெற்றுவரும் கூட்டத்தொடரில், ஈழத்தமிழர்கள் பிரச்னைகள்குறித்த அமர்வில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவும் பங்கேற்று உரையாற்றியிருக்கிறார்.
ஈழத்தமிழர்கள் சந்தித்துவரும் அவலங்கள்குறித்தும் முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்துவதுகுறித்தும் தமிழீழம் தொடர்பாக உலகத் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்துவதுகுறித்தும் தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதன்பின்னர் அக்கூட்டத்தில் பங்கேற்ற சிங்களர்கள் சிலர், வைகோவைச் சூழ்ந்துகொண்டு அவரை அச்சுறுத்தும் வகையில் அநாகரிகமான முறையில் நடந்துள்ளனர். ஐ.நா மனித உரிமைப் பேரவை வளாகத்துக்குள்ளேயே வைகோவைத் தாக்கும் உள்நோக்கத்தோடு நெருங்கியிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.
சிங்களர்களின் இத்தகைய அருவருப்பான நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்திய அரசும் சர்வதேச நாடுகளும் சிங்களர்களின் இந்தப் போக்கைக் கண்டிக்க வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications