தர்மபுரியில் தலித் இளைஞர்களைக் கைது செய்வதா… திருமா. கண்டனம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியில் தலித் இளைஞர்கள் 5 பேரை திடீரென காவல்துறையினர் நள்ளிரவு வேளையில் கைது செய்துள்ளனர்.
வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களை வைத்திருப்பதாக ஐயப்பட்டு அவர்களை விசாரித்திடும் வகையில் பிடித்துச் சென்றதாகக் காவல்துறையின் தரப்பில் சொல்லப்படுகிறது.
எதிர்வரும் ஜூலை 4ஆம் நாள் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனின் நினைவு நாள் என்பதால், அன்று அவ்வட்டாரத்தைச் சேர்ந்த தலித் மக்களும், தலித் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றுகூடுவார்கள் என்ற எண்ணத்திலும், அவ்வாறு ஒன்றுசேர விடாமல் தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்திலும் காவல்துறையினர் இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. சில நாட்களுக்கு முன்பு திடீரென தருமபுரி வட்டாரத்தில் 144 தடை ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்தப் போக்கு தலித் மக்களுக்கு எதிரானதாகும். இதனை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட தலித் இளைஞர்கள் 5 பேரையும் விசாரணை என்ற பெயரால் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக காவல்துறை சட்டவிரோதக் காவலில் வைத்துள்ளது. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications