கஜானா காலி என சொல்வதா? வந்தே மாதரம் ஏன் முதலில் ஒலிக்கப்பட்டது.. விஜய் பதில் சொல்லனும்.. திருமாவளவன்
சென்னை: திருமாவளவனின் விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள விஜய் இன்று முதல்வராக பொறுப்பேற்றார். சென்னையில் நடந்த பதவியேற்பு விழாவின் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் பாடப்படாதது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இதற்கான காரணம் என்ன என்பதை விஜய் விளக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோன்று முதல்வராக பதவியேற்றுக் கொண்ட பிறகு பேசிய விஜய், கஜானாவை காலி செய்துவிட்டு சென்று இருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்தார். இதற்கும் கருத்து தெரிவித்த திருமாவளவன், "கஜானா காலி என்று சொல்லி அச்சமூட்டுவது ஏற்புடையது அல்ல. தமிழகத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

திமுகவுடன் தான் இருக்கிறோம்
தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பாக வந்தே மாதரம் ஒலிக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக வீடியோ வாயிலாக பேசிய திருமாவளவன் கூறியதாவது:-
விஜய்க்கு ஆதரவு அளித்ததால் நாங்கள் பக்கம் மாறிவிட்டோம் என்று அர்த்தமில்லை. நாங்கள் இன்னும் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். பாஜக கட்டுப்பாட்டில் ஆளுநர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காகவே விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு அளித்தோம். பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படாமல், வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது.
விஜய் விளக்க வேண்டும்
அதுவும் இரண்டு முறை வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. கடைசியில் தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு காரணம் என்ன என்பதை விஜய் விளக்க வேண்டும். அதேபோல் பதவியேற்ற உடனேயே கஜானா காலி என்று சொல்லி அச்சமூட்டுவது ஏற்புடையது அல்ல. தமிழகத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
திமுக மற்றும் அதிமுக சேர்த்து 63 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன. அது தவெக வாக்குகளை விட இரட்டிப்பு என்பதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும். பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக தவறு நடந்திருந்தால், அதற்கு காரணமான அதிகாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னதாக விசிக எம்எல்ஏ வன்னி அரசு, "இது போன்ற ஆர்எஸ்எஸ், பாஜக சிந்தனைகளை தமிழக அரசு எதிர்க்க வேண்டும். ஸ்டாலின் இருந்திருந்தால் கண்டிப்பாக எதிர்த்திருப்பார். தமிழக மரபுகளையும் பண்பாட்டையும் விஜய் பாதுகாக்க வேண்டும்" என்று தெரிவித்து இருந்தார்.














Click it and Unblock the Notifications