மீனவ சட்டத்திருத்தம் மீனவர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும்: திருமா கண்டனம்
சென்னை: மீனவ மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் சட்டத் திருத்தத்தை தமிழக அரசு தளர்த்திட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் மீனவ மக்களின் துயரம் பெருந்துயரமாக இருந்து வருகிறது. நீண்ட நெடுங்காலமாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவரும் மீனவர்கள் நாள்தோறும் இலங்கை கடற்படை மற்றும் ஆந்திர மீனவர்களால் படும் துயரங்களை இந்த நாடே அறியும்.

இந்நிலையில் தமிழகக் கடல் மீன்படி ஒழுங்குமுறைச் சட்டம் 1983-ல் மீனவ மக்களின் ஒப்புதல் இல்லாமல் தமிழக அரசு பல்வேறு திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. அத்துடன், அத்திருத்தங்களை அவசர அவசரமாக சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளில் ஒப்புதல் பெற்று அதனை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
பல்வேறு மீனவ சங்கங்கள் தமிழக அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில், அக்கோரிக்கைகள் தொடர்பாக அவர்களைக் கலந்தாலோசிக்காமலேயே தமிழக அரசு தன்னிச்சையாக சில சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளதாகத் தெரிய வருகிறது. இவை மீனவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதாவது, சாதாரண மீன் பிடி படகுகள் 3 கடல் மைல் தூரத்துக்கு அப்பாலும், ஆழ்கடல் மீன் பிடி படகுகள் 12 கடல் மைல் தூரத்துக்கு அப்பாலும் மீன் பிடிக்க வேண்டுமெனப் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்ததுடன், வலை தயாரிப்பாளர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் பதிவு செய்திருக்க வேண்டுமெனவும் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது.
3 கிலோ மீட்டர் வரை ஆட்சி நிலவரை கடல் பகுதியாக அறிவித்து அப்பகுதியில் மீன் பிடிக்கக் கூடாதென்ற விதிமுறையால் கட்டுமர மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் மீன்வளத் துறை, தொழில் மற்றும் வணிகத் துறையிடம் மீனவர்கள் மீன்பிடிக்கத் தடையில்லாச் சான்று வாங்க வேண்டுமென புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. படகுகளின் நீள, அகலத்தைப் பொருத்து மோட்டார் இயந்திரத்தைப் பொருத்த வேண்டுமெனவும், அனுமதியில்லாமல் படகுகளில் வண்ணம் தீட்டக்கூடாது எனவும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
மேலும், படகுகளில் மது மற்றும் போதைப் பொருள்கள் இருந்தால் அப்படகுகளை உடைக்கும் அதிகாரமும் மீன் வளத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இவற்றையெல்லாம் கடைப்பிடிக்காதவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் மீனவர்களை தமிழக அரசு அச்சுறுத்தியுள்ளது.
ஒட்டுமொத்தத்தில், மீனவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, அனைத்து அதிகாரங்களும் மீன் வளத்துறையிடமே வழங்கப்பட்டுள்ளன. மேலும், மீனாகுமாரி ஆணையம், கடல்சார் மேலாண்மைச் சட்டம் மற்றும் வனத்துறைச் சட்டம் ஆகியவற்றின் பல பரிந்துரைகள் நடைமுறையில் மீனவ மக்களுக்கு ஒத்துவராதவை. அப்பரிந்துரைகளையே தமிழக அரசு தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஆகவே, மீனவ மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் குளறுபடியான இந்தப் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்திட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. என்று திருமாவளவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications