தேமுதிக கூட்டணியில் 'ம.ந.கூ. அண்ணன்' இணையாதது இதற்குதானாம்.... தொல். திருமாவளவன்
சென்னை: தேமுதிக தலைமையிலான கூட்டணியில் பாஜகவும் சேர்ந்தால் மக்கள் நலக் கூட்டணி மீண்டும் வெளியேறும் நிலை உருவாகும் என்பதால்தான் அதில் இணையவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக விகடன் ஏட்டுக்கு திருமாவளவன் அளித்த பேட்டி:
மக்கள் நலக் கூட்டணி என்பது அண்ணன். 8 மாதங்களுக்கு முன்பு பிறந்தது. தேமுதிக தலைமையிலான கூட்டணி என்பது தம்பி.

மக்கள் நலக் கூட்டணியில் இணைவதால் தேமுதிகவுக்கு கவுர குறைச்சல் இருக்காது. அவருக்கான தகுதி, மகிமை நீர்த்து போகாது.
எங்கள் அணியில் 5-வது கட்சியான தேமுதிக வந்தால் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அதன் கருத்தை கேட்க வாய்ப்பு இருக்கிறது. அக்கட்சிதான் சட்டசபையில் எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் முதலிடத்தையும் வகிக்க இருக்கிறது.
தேமுதிக தலைமையிலான கூட்டணியில் முதலில் மக்கள் நலக் கூட்டணி சேருகிறது... பின்னர் பாஜக வருகிறது என்ற சூழலில் நாங்கள் வெளியேற வேண்டிய நிலை வரும். அப்போது எங்கள் மீதான நன்மதிப்பு பாதிக்கப்படும். ஆகையால் தேமுதிக தலைமையிலான அணியில் இணையவில்லை.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மக்கள் நலக் கூட்டணி வலுவடைய தேமுதிக, தமாகா ஆகியவை கை கோர்க்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications