வெள்ள நிவாரணத்திற்கு தமிழக அரசு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளுக்கு மத்திய அரசிடம் கையேந்தி காத்துக் கிடக்காமல் தமிழக அரசே தனது சொந்த நிதியில் இருந்து முதல் கட்டமாக 20 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதியை ஒதுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
வரலாறு காணாத அளவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சி அளித்தன. விடாது விரட்டி பெய்த மழைக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது.
இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அடுக்கு மாடி குடியிருப்புகளையும் வெள்ள நீர் விட்டு வைக்கவில்லை. சில இடங்களில் முதல் தளம் முழுவதும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் தேங்கியது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது சென்னையில் பல இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம், கும்முடிப்பூண்டி முகாமில் உள்ள இலங்கை அகதிகளுக்கு நிவாரண உதவிகளை திருமாவளவன் இன்று வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், அனைத்து துறைகளிலும் ஏற்பட்டிருக்கின்ற இழப்பு ஒரு லட்சம் கோடியை தாண்டும் என்று மதிப்பிடப்படுகிறது. ஆனால் பிரதமர் மோடி பார்வையிட்ட பிறகு மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே நிவாரணமாக வழங்கியுள்ளது. இது லட்சத்தில் ஒரு மடங்குதான்.
தமிழக அரசு தனது சொந்த நிதியில் இருந்து நிவாரணப் பணிகளுக்கு என்று முதல் கட்டமாக 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும். தமிழக அரசுக்கும் பொருப்பு இருக்கிறது. மத்திய அரசுக்கும் இதில் பொருப்பு இருக்கிறது. தமிழக அரசு ஒரு மடங்கும், மத்திய அரசு இரு மடங்கும் என இந்த இழப்பீட்டை பகிர்ந்து கொண்டு பொறுப்பேற்று இதனை செய்ய வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார்.