சினிமா புகழுடன் ஹீரோ வேஷத்துடன் வந்துள்ளனர்.. அலர்ட்டா இருக்கணும்.. விஜய்யை தனியாக இடித்த திருமாவளவன்
திருச்சி: பாஜகவின் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த பலர் பல வேஷம் போடுகின்றனர். சில பேர் சினிமா புகழோடு வந்துள்ளனர். ஹீரோ என்ற வேஷத்துடன் வந்துள்ளனர். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன், புதிதாக அரசியல் களத்துக்கு வந்துள்ள தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ளதாக விவாதங்கள் எழுந்துள்ளன.

திருச்சியில் நடந்த பேரணியில் திருமாவளவன் பேசுகையில், அனைவரும் தேர்தல் கணக்குகளை பற்றியும், எத்தனை இடங்கள் என்பது பற்றியும், யார் முதல்வர் என்பது பற்றியும் பேசி கொண்டு உள்ளனர். நமக்கு அந்த கவலையில்லை. சிலர், திருமாவளவனுக்கு அரசியல் செய்ய தெரியவில்லை. பேரம் பேசத் தெரியவில்லை. மிரட்டத் தெரியவில்லை. துணை முதல்வர் வேண்டும் என கேட்க மறுக்கிறார் என்று பேசுகிறார்கள்.
எங்களுக்கு அட்வைஸ் தேவையில்லை
முதல்வர் பதவி பற்றியே கவலைப்படவில்லை. துணை முதல்வர் பதவியா? அம்பேத்கர், பிரதமர் பதவியை கைப்பற்றுங்கள் என வழிகாட்டி உள்ளார். அது தான் அதிகாரம் உள்ள பதவி. அது தான் அரசு. எந்த நேரத்தில் என்ன செய்யவேண்டும் என்பது திருமாவளவனுக்கு, விடுதலை சிறுத்தைகளுக்கு தெரியும். மற்றவர்களின் அறிவுரை தேவையில்லை.
10 ஆண்டுகள் தேர்தல் அரசியல் புறக்கணிப்பு செய்தோம். 25 ஆண்டு தில்லுமுல்லு அரசியலில் தாக்கு பிடித்து நிற்கிறோம். சம களத்தில் எங்களுடன் வந்தவர்களை காணவில்லை. திருச்சியில் இந்த பேரணி நடத்துவதற்கு அனுமதி இல்லை என்றனர். ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தும் மேலிடத்தில் இருந்தும் அனுமதி வரவில்லை என்றனர்.
நாங்க யாருக்கு பயப்படணும்?
தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பங்களை போலீசார் அகற்றினர். மற்ற கட்சி கொடிகள் இருக்கின்றன. போலீசுக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் இது ஒரு வாய்ப்பு. விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை மட்டும் அகற்றி உள்ளனர். இவ்வளவு நெருக்கடிகளை தாங்கி கொண்டு களத்தில் நிற்கிறோம்.
திமுகவை ஆதரிக்கவில்லை என்றால் என்ன ஆகிவிடும்? எங்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை வரப்போகுதா? என்ன செய்ய முடியும்? மத்திய அரசாலும் மாநில அரசாலும் ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் எதற்காக யாருக்காக பயப்பட வேண்டும். எங்களுக்கு என்ன நெருக்கடி?
திமுக உடன் உள்ள உறவு கொள்கை உறவு. இடங்கள் குறித்து பேச்சுவார்த்தையில் முடிவு செய்து கொள்வோம். திமுக-வுக்கும் எங்களுக்கும் உள்ள விமர்சனத்தை தாண்டி தேர்தல் உறவை வைத்துக் கொண்டோம் என்றால், அது தொலைநோக்கு பார்வையுடன் கூடிய கொள்கை முடிவு.
ஹீரோ வேஷம் போட்டு வந்துள்ளனர்
பாஜகவின் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த பலர் பல வேஷம் போடுகின்றனர். சில பேர் சினிமா புகழோடு வந்துள்ளனர். ஹீரோ என்ற வேஷத்துடன் வந்துள்ளனர். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சினிமா பின்னால் சினிமா ஹீரோவுக்கு பின்னால் செல்வார்கள் என சொல்கின்றனர். வெறும் சினிமா விளம்பரம் அல்லது புகழை நம்பி நீங்கள் ஏமாற மாட்டீர்கள். அம்பேத்கரை நம்பிய எவனும், எந்த விளம்பர மோகத்துக்கும் அடி பணிய மாட்டான்.
சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், பவர் ஸ்டார் அனைவரும் தமிழகத்திற்குள் தான். அம்பேத்கர் இவர்களை தாண்டிய ஸ்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எந்தப் பக்கம் உள்ளனரோ அந்த பக்கம் தான் வெற்றி. அந்தப் பக்கம் தான் ஆட்சி அதிகாரம்." எனப் பேசியுள்ளார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications