நீதிமன்றத்தில் ஆஜரான திருமாவளவன்.. கலவர வழக்கில் மயிலாடுதுறை நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு
மயிலாடுதுறை: மதமாற்ற தடை சட்டத்தை கண்டித்து கடந்த 2003ம் ஆண்டு நடந்த பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாளவவன் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி ஆவணங்களில் கையெழுத்திட்டார். தன்மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்த நிலையில் வழக்கு விசாரணை என்பது செப்டம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராகவும், சிதம்பரம் தொகுதி எம்பியாகவும் இருப்பவர் திருமாவளவன். கடந்த 2003ம் ஆண்டில் மதமாற்ற தடை சட்டத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் பேரணி நடந்தது. இதற்கு திருமாவளவன் தலைமை வகித்தார்.

இந்த பேரணியில் திடீரென்று கலவரம் ஏற்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு என்பது மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மொத்தம் 42 பேர் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கில் திருமாளவன் ஒருமுறை கூட நேரில் ஆஜராகவில்லை. நீதிமன்றம் கூறியும் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து கடந்த கடந்த ஜூலை 31ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டார். இது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதையடுத்து திருமாவளவன் தரப்பு வழக்கறிஞர்கள் பிடிவாரண்ட்டை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி விஜய குமாரி, திருமாவளவனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்தார். மேலும் முக்கிய நிபந்தனை ஒன்றையும் அவர் விதித்தார். ஆகஸ்ட் 27 ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் திருமாவளவன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்படி இன்று காலையில் மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி முன்பு வழக்கு விசாரணை நடந்தது. அப்போது 18 பேர் நேரில் ஆஜராகினர். திருமாவளவன் வருவதற்கு காலதாமதம் ஆனது. இதனால் அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதி விஜயகுமாரி முன்பு ஆஜரானார். அப்போது திருமாவளவன் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். இதைகேட்ட நீதிபதி விஜயகுமாரி வழக்கு விசாரணையை செப்டம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதன்பிறகு திருமாவளவன் இன்று மாலையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆவணங்களில் கையெழுத்திட்டார். இந்த வேளையில் திருமாவளவனை பார்க்க விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் ஏராளமான திரண்டு இருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் நீதிமன்ற வளாகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications