மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது- தமிழக அரசு தடாலடி!
முள்ளிவாய்க்காலில் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தியதாக கைது செய்யப்பட்ட மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சென்னை: இலங்கையில் தனி ஈழம் கோரி போராடியதால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு தடையை மீறி சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மே 17 இயக்க தலைவர் திருமுருகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் தனிஈழம் கோரி போராடி வந்த தமிழர்களை மீது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ராணுவம் கடந்த 2009-ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடத்தி கொத்து கொத்தாக கொன்று குவித்தது.

தமிழர்கள் அதிகளவில் தஞ்சமடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவத்தால் நடத்தப்பட்ட அராஜகம், மிருகத்தனமான தாக்குதல்களை இன்றும் யாரும் மறந்துவிட முடியாது. பெண்களை மானப்பங்கப்படுத்தி, நிர்வாணப்படுத்தி கொன்றனர்.
சென்னை மெரினாவில் கடந்த 7 ஆண்டுகளாக இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மெரீனாவில் கூடுவதற்கு போலீஸார் தடைவிதித்தனர். அதையும் மீறி மே 17 இயக்கத்தினர் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட 17 பேரை கைது செய்த போலீஸார் அவர்களை 14-ஆவது குற்றவியல் நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு ஆஜர்படுத்தினர். 17 பேரையும் வரும் 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் திருமுருகன் உள்ளிட்டோரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அவர்கள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது திருமுருகன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications