தமிழகத்தில் பொம்மலாட்ட ஆட்சி நடக்கிறது.. மோடி, அமித்ஷா சூத்திரதாரிகள்… திருநாவுக்கரசர் அட்டாக்
தமிழகத்தில் பொம்மலாட்ட ஆட்சி நடக்கிறது. மோடியும், அமித்ஷாவும் அதன் சூத்திரதாரிகள் என்று திருநாவுக்கரசர் கடுமையாக தாக்கியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் அதிமுக பிளவுபட்டிருப்பதை பயன்படுத்தி தமிழகத்தில் பொம்மலாட்ட ஆட்சியை பாஜக நடத்திக் கொண்டிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கடுமையாக தாக்கியுள்ளார்.
தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார் நினைவு தினமான இன்று எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
முன்னாள் இன்னாள் முதல்வர்கள் டெல்லிக்கு அழைக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டின் நலம் குறித்து, விவசாயிகள் பிரச்சனை குறித்து, கடன்களை ரத்து செய்வது குறித்து, வறட்சி நடவடிக்கை குறித்து, குடிநீர் பிரச்சனை குறித்து, வேலை இல்லாத திண்டாட்டம் குறித்து பேசுவதற்காக பிரதமர் இவர்களை அழைக்கவில்லை.

குடிநீர் பஞ்சம்
88 ஆயிரம் கோடிக்கு மேல் தமிழக அரசு நிதி கேட்டும், 4000 கோடிக்கும் குறைவாகத்தான் மத்திய அரசு பணம் ஒதுக்கியுள்ளது. ஏரி, குளம் என அனைத்து நீர் நிலைகளும் வறண்டு கிடக்கிறது. ஆடு மாடுகளுக்கு குடிக்க தண்ணீர் கிடையாது. பொதுமக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்குகிறார்கள். இதற்கு தீர்வு காண தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசும் நிதி ஒதுக்கவில்லை.

அதிமுகவை உடைப்பு
இவர்கள் சந்திப்பில் அரசியல் பேசப்படுவதாக தெரிகிறது. அரசியல் நோக்கத்தோடு இந்த சந்திப்பு நடக்கிறது. அதிமுகவை பாஜக உடைத்தது. ஒரு அணியை பயன்படுத்த நினைத்தது. அந்த அணி பலமாக இல்லை என நினைத்து மீண்டும் அதிமுகவை சேர்க்க நினைத்தது.

அதிமுக இப்போதைக்கு சேராது
யார் முதல்வர், யார் பொதுச் செயலாளர் என்ற பிரச்சனை இன்னும் இந்த இரண்டு அணியினருக்குள் முடிவாகவில்லை. இது முடிவாகாமல் அதிமுக இணைப்பு சாத்தியமில்லை.

பாஜக மிரட்டல்
இரண்டு அணிகளாக உள்ள அதிமுகவை சேர்க்க முடியாத காரணத்தால் ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்த மோடி அரசு முயற்சி செய்து வருகிறது. இதில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் நேரடியாக தலையிட்டு அதிமுகவின் இரண்டு அணிகளையும் மிரட்டி வருகின்றனர்.

பொம்மலாட்டம்
மத்திய அரசின் செயல்பாட்டால் தமிழக அரசு முடங்கியுள்ளது. மோடி அரசு தமிழகத்தில் பொம்மலாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. சூத்திரதாரியாக மோடியும் அமித்ஷாவும் உள்ளனர். பொம்மலாட்ட ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது.

மாநில சுயாட்சி
மாநில உரிமைகள், சுயாட்சி, கூட்டாட்சித் தத்துவம் என எதுவும் பின்பற்றப்படவில்லை. இந்த தத்துவங்களுக்கு மாறாகத்தான் மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications