ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் - திருநாவுக்கரசர் வேண்டுகோள்
சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் விலகியதைத் தொடர்ந்து, சமீபத்தில் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார் திருநாவுக்கரசர். அதனைத் தொடர்ந்து முக்கிய கட்சித் தலைவர்களை நேரில் அவர் சந்தித்து வருகிறார்.

அந்தவகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை நேற்று திருநாவுக்கரசர் நேரில் சந்தித்தார். சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின் போது மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்திரராசன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, பொதுச் செயலாளர்கள் கே.சீரஞ்சீவி, சி.டி.மெய்யப்பன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

சந்திப்புக்கு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து திருநாவுக்கரசர் கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலத்தில் அரசியல் செய்வது தவறு. ஜெயலலிதா அப்பா, அம்மா, கணவர் உள்பட குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல் தனியாக இருந்து வருகிறார். தோழிகள் சிலர் இருக்கிறார்கள். இருந்தாலும், அவரது உடல்நிலைக்கு தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தான் பொறுப்பு.

தேவைப்பட்டால் வெளிநாட்டு மருத்துவர்களை அழைத்து அவரை பரிசோதிக்க வேண்டும். அவரது உடல்நிலை குறித்து யாரும் வதந்திகளை பரப்ப கூடாது. தமாகா தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது அவர்களது முடிவு. நாங்கள் திமுகவுடன் பேசி வருகிறோம். அந்தந்த மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள காங்கிரஸ் குழுக்கள் எந்தந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து திமுக குழுக்களுடன் பேசி வருகின்றனர்.
அக்டோபர் 3ம் தேதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறது. வேட்பாளர் பட்டியலை என்ன இரவோடு இரவாகவா தயார் செய்தார்கள். முன்கூட்டியே தேர்தல் தேதி அறிவிப்பு தெரிந்து தயார் செய்யப்பட்ட பட்டியலை தான் வெளியிட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு தொடக்கத்திலேயே சரியில்லை. எனவே, மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என யார் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டால் என்ன? சட்டப்படி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications