இளங்கோவனால் நீக்கப்பட்ட அத்தனை பேரையும் மீண்டும் கட்சியில் சேர்க்க திருநாவுக்கரசர் உத்தரவு
சென்னை : தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நீக்கிய கட்சி நிர்வாகிகளை புதிய தலைவர் திருநாவுக்கரசர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளார். அன்புமணியின் மைத்துனர் டாக்டர் விஷ்ணு பிரசாத் மீண்டும் அதே பதவியை வகிப்பார் என்றும் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசின் சம்பந்தி முன்னாள் காங்கிரஸ் எம்.பி கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் விஷ்ணு பிரசாத், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர். சட்டசபை முன்னாள் உறுப்பினர். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் செய்யாறு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். இவரது தாத்தா விநாயகம், தமிழகசட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவராவார்.

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஷ்ணு பிரசாத் கட்சியில் இருந்த நீக்கி கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உத்தரவிட்டார். சில மாவட்ட தலைவர்களையும் நீக்கினார் ஈவிகேஎஸ் இளங்கோவன். இந்த உத்தரவுக்கு விஷ்ணு பிரசாத் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக சில வாரங்களுக்கு முன்பு திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டார். அவர், விஷ்ணு பிரசாத் நீக்கத்தை ரத்து செய்து வெளியிட்டுள்ளார்.
சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், நீக்கப்பட்ட தலைவர்களுக்கு பதில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களின் நீக்கம் செல்லாது. விஷ்ணு பிரசாத் அவரது பொறுப்பில் தொடர்ந்து நீடிப்பார். உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடுகிறவர்களிடம் இருந்து விருப்ப மனு வாங்க குழுக்கள் அமைக்கப்படும். மாவட்டந்தோறும் குழுக்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார். மதுரை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக கார்த்திக்கேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் விஷ்ணு பிரசாத், என் தோல்விக்கு தி.மு.க.,வினர், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஆகியோர்தான் காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார் விஷ்ணு பிரசாத். இதனையடுத்து அவரை கட்சியில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீங்கினார் ஈவிகேஎஸ் இளங்கோவன், இந்த நிலையில் விஷ்ணு பிரசாத்தை மீண்டும் நியமித்துள்ளார் புதிய தலைவர் திருநாவுக்கரசர்.












Click it and Unblock the Notifications