திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கொள்ளையில் 3 பேர் கைது.. 32 கிலோ நகைகள் மீட்பு
வங்கி கொள்ளையில் 3 பேர் கைது செய்யப்பட்டு, நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
Recommended Video

திருவள்ளூர்: திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கி கொள்ளையில் வங்கியின் அலுவலக ஊழியர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 32 கிலோ நகைகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.
திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் தல் மாடியில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த சனி, மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் நேற்று காலை வங்கிக்கு வந்த ஊழியர்கள், நுழைவு பகுதியில் உள்ள கேட் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, லாக்கர் அறையின் கதவு மற்றும் லாக்கர்களும் திறந்திருந்ததை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து வங்கி மேலாளர் போலீசாரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் நேற்று விசாரணை துரிதமாக நடைபெற்றது. கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்கள் சேகரிக்கப்பட்டது. அத்துடன் அங்கிருந்த சிசிடிவி கேமராவினையும் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் வங்கி ஊழியர்களுக்கும் இந்த கொள்ளைக்கும் ஏதும் சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது.
இதனிடையே வங்கியில் கொள்ளை என்ற தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் வாடிக்கையாளர்கள் வங்கி முன் திரண்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வங்கியின் ஊழியரே இதில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. அதன்படி அலுவலக உதவியாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கொள்ளைபோன 32 கிலோ தங்க நகைகளும் மீட்கப்பட்டன. பின்னர் மூவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் கள்ளசாவி போட்டு வங்கியினை திறந்து கொள்ளையடித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications