திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.. மிளகாய்ப்பொடி தூவி ஆட்சியரை கொல்ல முயன்ற கூலிப்படை!
திருவண்ணாமலை கலெக்டரை ஆட்சியர் அலுவலகத்தில் வைத்தே மிளகாய்ப்பொடி தூவி கூலிப்படையினர் கொல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை : ஆட்சியர் அலுவலகத்தில் வைத்தே திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியை கூலிப்படையினர் கொல்ல முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக கடந்த 31ம் தேதி முதல் கே.எஸ்.கந்தசாமி பொறுப்பேற்றுள்ளார். இவர் தனது அலுவலை முடித்து விட்டு கலெக்டர் பங்களாவிற்கு மதிய உணவு சாப்பிட சென்றுள்ளார். அபபோது அவருடன் கலெக்டரின் நேர்முக எழுத்தர், டபேதார் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.
கலெக்டர் பங்களா கேட் அருகே சென்ற போது அவரைப் பின்தொடர்ந்து பைக் ஒன்றில் 3 பேர் வந்துள்ளனர். திடீரென அவர்கள் ஹெல்மெட்டை கழற்றி அவர் முகத்தின் மீது மிளகாய்ப்பொடியைத் தூவி தாக்கத் தொடங்கியுள்ளனர். இதில் கலெக்டர் கந்தசாமி, நிலைதடுமாறி கீழே விழுந்தத நிலையில் பாதுகாவலர்கள் ஓடி வந்து அவரை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து கொல்ல வந்த 3 பேரை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர். பிடிபட்டவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கண்டிகை கிராமத்தை சேர்ந்த சிவா, மணிகண்டன் மற்றும் தாழம்பூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் விழுப்புரத்தில் உறவினர் ஒருவர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு வந்ததாகவும் பாரில் மது அருந்திய போது வேறொருவருடன் மோதல் ஏற்பட்டதாகவும் கூறினர். இதனையடுத்து அவரை பின் தொடர்ந்து வந்த போது அதே நிற சட்டை அணிந்திருந்ததால் ஆள்மாறி கலெக்டரை கொல்ல முயன்றதாகவும் கூறினர்.
எனினும் கலெக்டர் அலுவலகம் அருகிலேயே நடந்த இந்த கொலை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையிலேயே ஆள்மாறாட்டம் காரணமாக கொலை முயற்சி நடந்ததா, அல்லது பின்னணியில் வேறு ஏதேனும் சதி உள்ளதா என்றும் போலீசார் விசாரித்தனர்.
மது போதையில் இருந்த 3 பேர் மீதும் தடுப்பு காவல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.