கடனை வசூலிப்பதற்காக வங்கி ஏஜென்ட்டுகள் மூர்க்கத்தனம்... திருவண்ணாமலையில் விவசாயி பலி!
திருவண்ணாமலையில் டிராக்டருக்கான கடனை வசூலிக்க சென்ற தனியார் ஏஜென்ட்டுகள் கீழே தள்ளியதில் விவசாயி உயிரிழந்துள்ளார்.
திருவண்ணாமலை : டிராக்டருக்காக வாங்கிய வாராக்கடனை வங்கியின் சார்பாக வசூலிக்கச் சென்ற தனியார் ஏஜென்ட்டுகளுடனான வாக்குவாதத்தின் போது கீழே தள்ளிவிடப்பட்ட விவசாயி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அடுத்த போந்தை கிராமத்தை சேர்ந்தவர் 55 வயது விவசாயி ஞானசேகரன். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தனூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் விவசாய கடன் திட்டத்தில் டிராக்டர் வாங்கியுள்ளார். தொடர்ந்து 4 ஆண்டுகளாக தவணை தொகையை செலுத்திய ஞானசேகரன், கடந்த 3 ஆண்டுகளாக தவணைத் தொகையை செலுத்த முடியாமல் வறட்சியில் சிக்கியுள்ளார்.

இதனால் ஞானசேகரனின் பெயரை வாராக்கடன் பட்டியலில் சேர்த்த வங்கி நிர்வாகம் கடன் தொகையை வசூலிக்கும் பொறுப்பை தனியார் ஏஜென்சியிடம் அளித்துள்ளது. 4 பேர் கொண்ட கும்பல் விவசாயி ஞானசேகரனின் வீட்டிற்கு சென்று கடனை செலுத்தாததால் டிராக்டரை ஜப்தி செய்வதாகக் கூறினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி அறுவடை முடிந்து 2 மாதத்தில் தவணைத் தொகையை செலுத்திவிடுவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் ஏஜென்சி குண்டர்கள் அதை ஏற்க மறுத்து டிராக்டரை ஜப்தி செய்ய முயற்சித்துள்ளனர். அப்போது ஏஜென்சி ஆட்களுக்கும் ஞானசேகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதில் ஏஜென்சி ஆட்கள் விவசாயியை கீழே பிடித்துத் தள்ளியதாகத் தெரிகிறது. இதனையடுத்து அவர் மயங்கி விழுந்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விவசாயி ஞானசேகரனின் மகன் தானிப்பாடி போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications