திருவாடானை அருகே அரசு பள்ளியில் ஒரேயொரு மாணவருக்கு 2 ஆசிரியர்கள்
ராமநாதபுரம்: திருவாடானை அருகே உள்ள ஒரு அரசு துவக்கப் பள்ளியில் படிக்கும் ஒரேயொரு மாணவருக்காக இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிவது பலரையும் வியக்க வைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள நாச்சியேந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஒரேயொரு மாணவர் தான் படிக்கிறார்.
5ம் வகுப்பும் படிக்கும் அவருக்காக ஒரு தலைமை ஆசிரியர், ஆசிரியர் என 2 பேர் பணியாற்றி வருகிறார்கள். அரசு பள்ளிகளில் தரமில்லை என்று நினைக்கும் இப்பகுதி மக்கள் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்துள்ளனர்.
இந்த காரணத்தால் தான் இப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் இழுத்து மூடும் நிலையில் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் சேரக்கை இல்லாததால் கீழக்கோட்டை, அணிக்கி, டி. கிளியூர், அறிவித்தி ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வந்த பள்ளிகள் மூடப்பட்டன.
இந்நிலையில் நாச்சியேந்தல் பள்ளி குறித்து திருவாடானை உதவி தொடக்கக் கல்வி அதிகாரி கூறுகையில்,
நாச்சியேந்தல் பள்ளி ஒரு வாரத்தில் குழந்தைகளை சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.