தற்போது மறு தேர்தல் மட்டுமே ஒரே தீர்வு.. நடிகர் அரவிந்த் சாமி
இது ஒன்றும் மக்களின் தீர்ப்பு அல்ல என்று தமிழக அரசியலின் இன்றைய சூழல் குறித்து அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: தற்போது உள்ள சூழ்நிலையில் மறுதேர்தல் மட்டுமே ஒரே தீர்வு என்று நடிகர் அரவிந்த் சாமி கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு ஜனநாயக முறையில் நடைபெறவில்லை எனக் கூறி ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார் எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். மேலும் சட்டப்பேரவைக்குள் தான் தாக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடிகர்கள் பலரும் தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தொடர்ச்சியாக இன்றைய நிகழ்வுகள் குறித்து நடிகர் அரவிந்த்சாமி கருத்து தெரிவித்து வருகிறார்.
தற்போது அவரது டிவிட்டர் பதிவில், "என்னைப் பொறுத்தவரை தற்போதுள்ள சூழ்நிலையில் மறுதேர்தல் மட்டுமே ஒரே தீர்வு. இது ஒன்றும் மக்களின் தீர்ப்பு அல்ல" என்று தெரிவித்துள்ளார் அரவிந்த்சாமி.
In my opinion, The only solution that is acceptable under the circumstances is a re- election. This is not the people's mandate.
— arvind swami (@thearvindswami) February 18, 2017