இதுலாம் சின்ன மேட்டர்! செந்தில் பாலாஜி கைதுக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா ‛கூல்’ பதில்! திமுக எகிறுமாமே!
கோவை: அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கைது நடவடிக்கை குறித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூலாக பதிலளித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி உள்ளார். இவரது சகோதரர் பெயர் அசோக்.
இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு அசோக், செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமான ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது.

இதையடுத்து நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் வீடுகள் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அதிரடியாக சோதனை செய்தனர். கரூரை பொறுத்தமட்டி்லத ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜி வீடு, ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது தம்பி அசோக் வீடு, ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்பட 8 இடங்களில் அமலாக்க துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் முடிவில் இன்று அதிகாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது நெஞ்சுவலி எனக்கூறி அவர் துடித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜியை சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதித்த அமலாக்கத்துறையினர் அவரை கைது செய்தனர்.
செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பைபாஸ் சர்ஜரிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கோவையில் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து இருப்பது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த கேள்விகளுக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா பதிலளித்தார். இதுதொடர்பாக டிஆர்பி ராஜா கூறியதாவது: ‛‛இதைவிட பெரிய முதலைகளை எல்லாம் சந்தித்த இயக்கம் திமுக. நிச்சயமாக, இந்த அடக்குமுறையில் இருந்து வெளிவந்து இன்னும் வலுவாக திமுக வெற்றி நடைபோடும். அமைச்சர் செந்தில்பாலாஜி நிச்சயமாக தனது மீது எந்த பழியும் இல்லை என்று நிரூபித்து நிச்சயம் வெளியே வருவார்'' என்றார்.
இதையடுத்து செந்தில் பாலாஜியின் கைது அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலை பாதிக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிஆர்பி ராஜா, ‛‛திமுக எப்போதுமே இந்த மாதிரி அடக்க வேண்டும் என்று நினைத்தால் இன்னும் வேகமாக எகிறும் இயக்கம். கருணாநிதியின் வளர்ப்பு நாங்கள். ஸ்டாலின் மகன்கள், தம்பிகள் நாங்கள். இதற்கு எல்லாம் பயந்துபோகக்கூடிய ஆட்கள் நாங்களில்லை'' என்றார்.

இதையடுத்து இந்த கைது நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, அவர், ‛‛நிறைய விதிகள் மீறப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபோன்று நிறைய விஷயங்களை பார்த்துவிட்டோம். இது எல்லாம் சின்ன மேட்டர். திமுக இதுபோன்று பல பிரச்சனைகளை சந்தித்துள்ளது. செந்தில் பாலாஜி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
சிலர் பதவிகளில் இருப்பதனால் ஆடுகிறார்கள். அமலாக்கத்துறையின் இந்த செயல் என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தான். திமுக மிகவும் சிறப்பாக வளர்ந்து வருகிறது. மக்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலினுக்கு நல்ல பெயர் உள்ளது. திராவிட மாடல் அரசை கண்டு பாஜக பயப்படுகிறது'' எனக்கூறிவிட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications