அரசு பேருந்து கட்டண குறைப்பு கண்துடைப்பு- ஏமாற்றம்: துரைமுருகன் கண்டனம்
பேருந்து கட்டண குறைப்பு வெறும் கண் துடைப்பே என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
Recommended Video

சென்னை : ரூபாய் கணக்கில் பேருந்து கட்டணத்தை ஏற்றிவிட்டு தற்போது பைசா அளவில் குறைத்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழக அரசு பேருந்துகளில் கடந்த 20ம் தேதி முதல் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. திடீரென உயர்த்தப்பட்ட அதிக கட்டண உயர்வால் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்தனர்.

இதனால் இதனைக் கண்டித்து பொதுமக்கள், மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. இந்நிலையில், இன்று தமிழக அரசு பேருந்து கட்டணங்களை குறைத்து உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவிலிருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், விரைவு பேருந்துகளில் கி.மீ.க்கு 80 பைசாவிலிருந்து 75 பைசாவாகவும், சொகுசு பேருந்துகளில் கி.மீ.க்கு 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதி நவீன சொகுசு பேருந்துகளில் கி.மீ.க்கு 110 பைசாவலிருந்து 100 பைசாவாகவும், குளிர்சாதன பேருந்துகளில் கி.மீ.க்கு 140 பைசாவிலிரு்து 130 பைசாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
விலை ஏற்றத்தின் போது ரூபாய் கணக்கில் ஏற்றிவிட்டு தற்போது இரண்டு பைசா, ஐந்து பைசா என்கிற அளவில் விலை குறைக்கப்பட்டுள்ளதற்கு திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், இது தமிழக அரசின் கண் துடைப்பு நடவடிக்கை தான். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து உள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டு உள்ளார்கள். இதனால் மக்களுக்கு எந்த விதத்திலும் நன்மை கிடையாது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், விலை ஏற்றத்தின் போது மட்டும் ரூபாய் கணக்கில் ஏற்றியவர்கள் தற்போது, பைசா அளவில் குறைத்து மக்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள். பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக அறிவித்தி இருந்த போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications